தங்கம் வாங்கினால் கடன் கிடையாது - வங்கிகள் புதிய கட்டுப்பாடு!

திங்கள், 2 செப்டம்பர் 2013 (12:16 IST)
FILE
மக்கள் தங்கம் வாங்குவதைக் கட்டுபடுத்தும் நோக்கில், வங்கிகள் அளிக்கும் கடன் தொகையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம் வாங்கக்கூடாது என்று நிபந்தனை விதிக்கத் தொடங்கியுள்ளன. தனிநபர் கடன்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும் என்று வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிப்பதற்காக தங்க இறக்குமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள வழிமுறைகளின்படியே இந்த நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.

இந்த விதிமுறைகளின்படி கடன் பெறுபவர்கள் அந்தத் தொகையைக் கொண்டு தங்கத்தை கச்சாத் தங்கமாகவோ, கட்டிகள், ஆபரணங்கள், காசுகளாகவோ வாங்கக்கூடாது என்றும், தங்க மாற்று வர்த்தக நிதி, தங்க மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வங்கிகளே விற்பனை செய்யும் தங்க நாணயங்களையும் 50 கிராமுக்கு மேல் வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்