கடல் தோல்விதான் - ஜெயமோகனின் அந்தர் பல்டிகள்

வியாழன், 21 பிப்ரவரி 2013 (20:37 IST)
FILE
கடல் படம் தோல்விதான் என்று ஒத்துக் கொண்டிருக்கிறார் ஜெயமோகன்.

தான் சம்பந்தப்பட்ட எதையும் தோல்வி என்று ஒத்துக் கொள்கிறவர் அல்ல ஜெயமோகன். அதற்கும் ஒரு தத்துவ விளக்கம் வைப்பார். அதன் முத்தாய்ப்பாக இருப்பது இவனுங்களுக்கு கலையின் உள்ளொளியை த‌ரிசிக்கிற அகப்பார்வை இல்லை என்பதாக இருக்கும். கடல் விஷயத்திலும் அப்படியே.

மேலோட்டமான பார்வையில் ஹீரோ, வில்லன், நாயகி என்று வணிக சினிமாவுக்குள்ள ஃபார்முலா இருந்தாலும் படிமங்களால் படத்தை நகர்த்தியிருகிகறோம் என்றெல்லாம் பாறாங்கற்களாக தனது விளக்கத்தில் போட்டு மூடுகிறார் ஜெயமோகன். இந்த அரைகுறை முயற்சியை செவ்வியல் ஆக்கம் என்று சொல்ல ஜெயமோகனால்தான் முடியும். வணிகமும், படிமமும், ஆன்மீகமும் கலந்த இந்த கலவை ஒருவகையில் தோல்விதான் என்று வேண்டா வெறுப்பாக ஓ‌ரிடத்தில் மொழிந்திருக்கிறார்.

தான் கதை, திரைக்கதை அமைத்த போது கச்சிதமாக இருந்த கடல், படமாக்கிய போது நுட்பமான விஷயங்களில் இயக்குனர் அதிகபடியான தலையீட்டை நடத்தியதால் துண்டுபட்டுப் போனதாக தோல்வியின் மொத்த பங்கையும் மணிரத்னம் பக்கம் நகர்த்தியிருக்கிறார்.

படத்தில் இவர் வைத்திருப்பதாகச் சொல்லும் படிமங்கள் எவையென்று பேசினால் சி‌ரிப்புதான் வரும். அதை தனிக் கட்டுரையாக எழுத வேண்டும்.

கடலை செவ்வியல் பிரதி, தமிழ் சினிமாவை வாழ வைக்க வந்த மாணிக்கம் என்றெல்லாம் விமர்சனம் எழுதாதவர்களை விசிலடிச்சான் குஞ்சு, உலக சினிமா பார்க்கத் தெ‌ரியாதவன் என்று வறட்டுத்தனமாக சாடவும் செய்திருக்கிறார். ச‌ரி, தமிழனுக்கு படம் பார்க்கத் தெ‌ரியாது. உலக சினிமாவில் ஊறியவர்களான மலையாளிகளின் ஊ‌ரிலும் படம் அட்டர் பிளாப்பாகியிருக்கிறது.

ஜெயமோகனின் சினிமா உளறல் அளவுகடந்து போகிறது என்பதற்கு அவ‌ரின் கடல் விளக்கமே சான்று.

வெப்துனியாவைப் படிக்கவும்