தரமாட்டேன் நிதி - கவிஞர் தாமரை ஆவேசம்!

புதன், 7 ஜனவரி 2009 (20:42 IST)
இலங்கை தமிழர்களுக்காக நிவாரண நிதி தர மாட்டேன் என்று கூறியதோடு, யாரும் நிதி அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் பாடலாசிரியர் தாமரை.

நேற்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட தாமரை ஆவேசமாக பேசினார்.

18 வருடங்களுக்குப் பிறகு தமிழனுக்கு ஓரளவு சொரணை வந்து ஈழத் தமிழனுக்காக பேச முன் வந்திருக்கிறான். உணர்வுகளை காட்டத்தான் போராட்டம். போராட்டம் கூடாது என்றால் எல்லாரும் சேர்ந்து ஒப்பாரி வைத்துவிட்டு போகலாம்.

இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றோம். ஆனால் போர் நிறுத்தப்படவில்லை. இந்திய அரசு போரை நிறுத்த சொல்லவில்லை. தமிழக அரசும் போரை நிறுத்த மத்திய அரசை வற்புறுத்தவில்லை. இங்கு நடப்பது எல்லாமே நாடகம். யாரையும் விமர்சிக்கக் கூடாது என்கிறார்கள். விமர்சனம் இல்லாமல் போராட்டம் ஏது?

இறையாண்மைன்னு புதிய வார்த்தையை கண்டுபிடித்திருக்கிறார்கள். அப்படின்னா என்ன? நாட்டு மக்கள் தங்கள் பாதுகாப்புக்கு தங்கள் நாட்டை சார்ந்திருப்பதுதான் இறையாண்மை. நாம் கொல்லப்படும் போது நமது அரசு அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அங்கே இறையாண்மை எங்கிருக்கிறது? இறையாண்மை இல்லாத அரசுகள் இறையாண்மைக்கு உட்பட்டு தீர்வு காண முயல்கின்றன.

முதலில் இந்தியன், பிறகு தமிழன் என்ற வசனம் இப்போது பேசப்படுகிறது. முதலில் தமிழனாக இருப்போம். இந்தியனாக இருப்பது பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

இப்போது வசூலிக்கும் நிவாரண நிதி ராஜபக்சே நிவாரண நிதி. இலங்கையிடம் இந்த நிதியை கொடுத்தால் அது ஒரு கையில் மாலையும், ஒரு கையில்
வி­ஷமும் கொடுத்தது போலாகிவிடும். விமானத்தில் குண்டு போடுகிறவர்கள் அப்படியே நிவாரண பொருட்களையும் ஆகாயத்திலிருந்து போடுவார்கள் என்று நினைத்தால் அதைவிட தவறு இருக்க முடியாது.

ஆகவே யாரும் நிவாரண நிதி கொடுக்காதீர்கள். நான் ஒரு பைசா தர மாட்டேன். ஏனேன்றால் நான் தமிழச்சி.

தாமரைக்கு முன் பேசிய பாரதிராஜா, ஆவேசத்தில் ஒருவனைப் பார்த்து வெட்டிவிடுவேன் என்று சொன்னால் உடனே பிடித்து ஜெயிலில் போட்டுவிடுவார்களா? அப்படி போட்டால் எல்லோரையும் போட வேண்டிவரும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்