வாரணம் ஆயிரம் - படமும் பாடலும்!

வியாழன், 11 செப்டம்பர் 2008 (19:56 IST)
கெளதம் வாசுதேவ மேனன் இயக்கம். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. பாடல்களை கேட்க எவ்வளவு பரவசமாக இருப்பார்கள் ரசிகர்கள். ஆனால், வாரணம் ஆயிரம் படத்தின் பாடல்கள் படம் வெளியாகும் வரை ரசிகர்களின் காதுகளை எட்டப் போவதில்லையாம். ஏன்...?

வாரணம் ஆயிரம் தொடங்கிய போது பாடல்களுக்கு நிர்ணயித்த விலையை விட அதிக விலை தர முன்வந்ததாம் இன்னொரு நிறுவனம். பழைய விலைக்கே தருவதா இல்லை புதிய நிறுவனத்துக்கு கைமாற்றி விடுவதா என்பதில் குழப்பம். அதனால் படம் வெளியாகும் பத்தொன்பதாம் தேதியே பாடல்களும் வெளியாகிறதாம்.

யானை படம் என்றால் பாடல்கள் மணி ஓசை. யானை வரும் முன் ஒலிக்க வேண்டிய மணி முதல் முறையாக யானையுடன் ஒலிக்கிறது. படம் வெளிவரும் முன் பாடல்கள் ஹிட்டாவது, படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவும். பிறகு ஏன் இந்த ரிஸ்க்?

விடை தெரியாமல் விழிக்கிறது கோடம்பாக்கம்.

வெப்துனியாவைப் படிக்கவும்