பிரமாண்டமான பாடல் வெளி‌யீட்டு விழா!

சனி, 26 ஏப்ரல் 2008 (20:14 IST)
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடிகல் கமல்ஹாசன் பத்து வேடங்களில் நடித்த 'தசாவதாரம்' படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

ஆஸ்கார் ஃபிலிம்ஸ் பிரமாண்டமான முறையில் தயாரிக்க, கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் எடுக்கப்பட்டுள்ள படம். தமிழ் சினிமா வரலாற்றில் இவ்வளவு பெரிய பாடல் கேசட் வெளியீட்டு விழா நடந்ததில்லை. பிரமாண்ட படங்களை எடுக்கும் பல தயாரிப்பாளர்களும் ஆச்சரியத்தில் திளைத்தனர்.

இவ்விழாவில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, இளைய தளபதி விஜய், படத்தின் நாயகி மல்லிகா ஷெராவத், படத்தின் நாயகன் கமல், இயக்குனர் கே.எஸ். ரவிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

'தசாவதாரம் படத்தின் பாடல் கேசட்டை தமிழக முதல்வர் கருணாநிதி வெளியிட, ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் பெற்றுக்கொண்டார். கேசட்டை வெளியிட்ட கலைஞர் பாராட்டிப் பேசுகையில், எத்தனையோ பிரமாண்டங்கள் இருந்தாலும், இந்த 'தசாவதாரம்' தான் உண்மையான பிரமாண்டம் என்றார்.

ஜாக்கிசான் மேபசுகையில், ஹாலிவுட்டுக்கு நிகராக இங்கேயும் சில பிரமாண்டங்களையும், தொழில்நுட்பங்களையும் பார்க்கிறேன் என்றதோடு, அமிதாப், கமலுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று தன் ஆவலையும் வெளியிட்டார்.

மேலும் இவ்விழாவில் திரைப்படத்தை சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும், அரசியல் புள்ளிகளும் கலந்துகொண்டனர். இவ்விழாவை முன்னிட்டு நல உதவித் திட்டங்களுக்காக முதல்வரிடம் காசோலைகள் வழங்கப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்