கஸ்தூரிராஜா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

திங்கள், 25 பிப்ரவரி 2008 (19:05 IST)
கஸ்தூரி ராஜாவின் ஆர்.கே. புரொடக்ஷன் சார்பில் தயாரான 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்தை, ஜி. பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார். தனுஷ் நடித்த இந்தப் படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது.

இதன் தெலுங்கு உரிமையை அறுபது லட்ச ரூபாய்க்கும், கன்னட உரிமையை பத்து லட்சத்திற்கும் விற்றிருக்கிறார் கஸ்தூரி ராஜா. இது குறித்து பூபதி பாண்டியனிடம் அவர் எதுவும் கூறவில்லை என்று தெரிகிறது.

ஒரு படத்தின் ரீ-மேக் உரிமையை விற்கும்போது, அதில் கிடைக்கும் பணத்தில் நாற்பது சதவீதத்தை இயக்குனருக்கு தயாரிப்பாளர் கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை. கஸ்தூரி ராஜாவோ, பூபதி பாண்டியனிடம் காசையே கண்ணில் காட்டவில்லையாம். தனுஷின் மீதிருந்த நட்பால் முறையான ஒப்பந்தமும் போடவில்லையாம் பூபதி பாண்டியன்.

நியாயப்படி தனக்குச் சேர வேண்டிய பணத்தை கஸ்தூரி ராஜாவிடமிருந்து பெற்றுத் தரும்படி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார் பூபதி பாண்டியன்.

பஞ்சாயத்தின் முடிவில் பூபதிக்கு பணம் கிடைக்குமா, பட்டை நாமம் கிடைக்குமா? அடுத்த திருவிளையாடல் ஸ்டார்ட்!

வெப்துனியாவைப் படிக்கவும்