பாலாவுடன் கூட்டணி - அமீர் அறிவிப்பு!

திங்கள், 25 பிப்ரவரி 2008 (19:04 IST)
பிரிந்தவர் கூடினால் பேரின்பம் என்பார்கள். அமீரின் பேச்சிலும் பேரின்பம். பருத்தி வீரனுக்காக வெளிநாட்டில் விருது வாங்கி வந்தவர், அந்த சந்தோஷ கணங்களை பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

வெளிநாடுகளில் தமிழ்ப் படங்கள் பாராட்டும், விருதும் பெறுவது பெருமைக்குரிய விஷயம் என்றார் அமீர். பேச்சின் இடையே இன்றைய நடிகர்களைப் பற்றிய தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். ரஜினி இன்றும் பாலசந்தரை குருஜி என்கிறார். கமல், பாலசந்தர் திட்டியதையும் பெருமையாக கூறுகிறார். ஆனால் இன்றைய நடிகர்கள்? "போனில் பேச வேண்டுமென்றாலும், மேனேஜரிடம் அப்பாயின்மெண்ட் வாங்க வேண்டியிருக்கு!" (யாருப்பா அது?)

பாலாவும் அமீரும் பால்யகால நண்பர்கள். சின்ன உரசலால் தசைமாறிப் போனவர்களை பழைய நட்பு ஒன்றிணைத்திருக்கிறது. பாலாவுடன் இணைந்து விரைவில் படம் தயாரிப்பேன் என்றார் அமீர். அந்த நல்ல நாளுக்கு காத்திருக்கிறோம்.

பருத்தி வீரனுக்காக வரவேண்டிய பணம் இன்னும் கைக்கு வரவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டார் அமீர்.

விருது கிடைத்த பிறகும் இந்த வில்லங்கம் மட்டும் முடியாது போலிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்