சுந்தர்.சி.யை மிரட்டிக் காதலிக்கும் கோபிகா

லாரி டிரைவர் புலிப்பாண்டி மீது அதே ஊரைச் சேர்ந்த ஸ்கூல் டீச்சர் பாரதிக்கு தீராத காதல். புலிப்பாண்டியைப் பார்க்கும் போதெல்லாம் தன் காதலை அவனிடம் சொல்கிறாள். புலிப்பாண்டியோ அவளது காதலை ஏற்றுக் கொள்ளாதவன் போல் விலகி விலகி செல்கிறான். பாரதியோ அவனை துரத்திக் கொண்டே இருக்கிறாள்.

ஒரு நாள் புலிப்பர்ணடியை சந்திக்கும் பாரதி குறிப்பிட்ட ஒரு தேதியைச் சொல்ல, "அந்த நாளில் நீயே என்னிடம் வந்து ஐ லவ் யூ என்று சொல்ல வைக்கிறேன் பார்" என்று சவால்விடுகிறாள். அவள் இப்படி சொல்வதில் ஏதோ சதித்திட்டம் இருப்பதாக நினைக்கும் புலிப்பாண்டி, பாரதியிடமிருந்து தப்பிக்க குறிப்பிட்ட நாளில் வெளியூர் சென்றுவிடலாம் என்று முடிவு செய்கிறான்.

புலிப்பாண்டியின் லாரியில் கிளீனராக வேலை பார்க்கும் லாரி டிரைவர் கிளினீர் "கிளி", நண்பன் லட்சுமணன் இருவரும் புலிப்பாண்டிக்கு, "அவளுக்கு பயந்து கொண்டு வெளியூர் போக வேண்டாம். வீட்டிலேயே மௌனவிரதம் இருங்கள். அப்படியே அவன் வந்தாலும் நீங்கள் எதுவும் பேசாமல் இருந்துவிடுங்கள்" என்று ஐடியா கொடுக்கிறார்கள். அவர்கள் சொல்வதை ஏற்று புலிப்பாண்டியும் மௌனவிரதம் இருக்கிறான்.

அந்த நேரம் பார்த்து மேளதாளத்துடன், சீர்வரிசைகளுடன் ஒரு பெரும் கூட்டம் புலிப்பாண்டியைத் தேடி வருகிறது. எதற்காக இந்த மேளதாளமெல்லாம் என்று அவர்களைப் பார்த்து கிளியும், லட்சுமணனும் கேட்க, புலிப்பாண்டிக்கும் பாரதிக்கும் கல்யாண நிச்சயதார்த்தம் செய்ய வந்ததாக கூறுகிறார்கள்.

அதிர்ச்சியடையும் புலிப்பாண்டி மௌன விரதத்தைக் கலைத்து, "என்னைக் கேட்காமல் எனக்கு எப்படி கல்யாண நிச்சயதார்த்தம் செய்யலாம்" என்று கோபத்தோடு கேட்கிறான்.

வந்திருந்தவர்களில் ஒருவர், புலிப்பாண்டியும், பாரதியும் நெருக்கமாக இருப்பது போன்ற சில புகைப்படங்களை எடுத்துக் காட்டி, "பாரதியும் நீயும் இவ்வளவு நெருக்கமாக பழகிவிட்டு இப்போது நிச்சயதார்த்தம் வேண்டாம் என்று சொன்னால் எப்படி? அவளை வேறு யார் கல்யாணம் செய்து கொள்வார்கள்?" என்று கேட்க புலிப்பாண்டி அதிர்ச்சியடைந்தான்.

இப்படி ஒரு காட்சி, ஹோம் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார், திருமதி சுஜாதா விஜயகுமார் தயாரிப்பும் வீராப்பு படத்துக்காக திருநெல்வேலியில் படமாக்கப்பட்டது. புலிப்பாண்டியாக சுந்தர்.சியும், பாரதியாக கோபிகாவும், கிளியாக சந்தானமும், லட்சுமணனாக பாலா லட்சுமணாவும் நடித்தனர்.

தலைநகரம் வெற்றிப் படத்துக்குப் பிறகு இப்படத்தில் சுந்தர்.சி. கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கோபிகா நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், விவேக், டெல்லிகுமார், மாறன், விச்சு, சுப்ரீத், சோப்ராஜ், சுமித்ரா, தேஜாஸ்ரீ, சந்தோஷி, ரம்யா, பிரேம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு: கே.எஸ்.செல்வராஜ், இசை: இமான், படத்தொகுப்பு: காசி விஸ்வநாதன், கலை: ஜனா, பாடல்கள்: நா.முத்துகுமார், சண்டைப் பயிற்சி: தளபதி தினேஷ், நடனம்: கல்யாண், பிரபுஸ்ரீனிவாஸ், தயாரிப்பு மேற்பார்வை: பாலகோபி

திரைக்கதை, வசனம், இயக்கம்: பத்ரி.

தயாரிப்பு: கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார், திருமதி சுஜாதா விஜயகுமார்.

வெப்துனியாவைப் படிக்கவும்