இலங்கை நாட்டிற்கு இன்று எதிரிகள் இல்லை – மைத்திரிபால சிறிசேனா

செவ்வாய், 6 அக்டோபர் 2015 (15:07 IST)
இலங்கைக்கு இன்று உலகில் எதிரிகளும் இல்லை, இலங்கைக்கு எதிராகச் செயற்படுகிறவர்களும் இல்லை என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
 

 
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
“உலகிலுள்ள அனைவரும் எம்முடன் நட்பாக உள்ளனர். அவர்கள் எங்களோடு சேர்ந்து செயற்படுகின்றனர். எங்களுக்கு உலகத்தில் இன்று எதிரிகள் இல்லை. எதிராக செயற்படுகின்றவர்களும் இல்லை.
 
இந்தியா, பாகிஸ்தான், பிரித்தானியா, சீனா, ஜப்பான் என எல்லோரும் எங்களுடன் இருக்கின்றார்கள். எனவே இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே நல்ல சூழலாக அமைந்துள்ளது.
 
இதுதான் சரியான யுகம். எனவே இந்த அரசாங்கத்தின் காலத்தில் சிறப்பான நிலைமையை உருவாக்க வேண்டும். எங்களுக்குள் எந்தப் பிரச்சினை இருந்தாலும் அதனை பேச்சுக்கள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.
 
நாட்டில் வாழ்கின்ற எல்லா மக்களும் ஒற்றுமையாக சகோதரத்துவதோடு வாழ்கின்ற சூழலை உருவாக்குவதுதான் எங்களுடைய நோக்கமாகும். எமது நாட்டின் அபிவிருத்திக்கு அனைத்து நாடுகளும் நிறுவனங்களும் தங்களுடைய உதவிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன” என்று கூறியுள்ள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்