மகனைச் சுட்டுக் கொன்றதால் 25 தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தாய்

வியாழன், 27 நவம்பர் 2014 (17:17 IST)
ஆப்கானிஸ்தானில் தனது மகனை சுட்டுக் கொன்றதால் தீவிரவாதிகள் 25 பேரை அவரது தாய் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள பரா மாகாணத்தில் சோதனைச் சாவடி ஒன்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கித் தீவிரவாதிகள், அதிகாலையில் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு ரெசா குல் என்ற பெண்மணி வெளியே வந்து பார்த்துள்ளார்.  அப்போது, அப்பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் பணிபுரியும் தனது மகனைத் தேடிச் சென்றுள்ளார்.  அங்கு அவரது மகன் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கிடந்ததைப் பார்த்துள்ளார்.

இதனைக் கண்டு கோபமடைந்த குல், அருகே கிடந்த துப்பாக்கியால் தீவிரவாதிகளை நோக்கிச் சரமாரியாக சுட்டுத் தள்ளியுள்ளார்.  அவருடன் சேர்ந்து அவரது குடும்பத்தினரும் இணைந்து இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த துப்பாக்கி சூட்டில் 25 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது குறித்து அவருடைய மகள் பாத்திமா கூறுகையில், ”தீவிரவாதிகளுக்கு எதிராக ஒரு குடும்பப் போரையே நாங்கள் நடத்தியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்