பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியுடன் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் திடீர் சந்திப்பு

புதன், 27 ஆகஸ்ட் 2014 (15:44 IST)
பாகிஸ்தான் நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலவரம் குறித்து பிரதமர்  நவாஸ் ஷெரீஃப்பும், ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃப்பும் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் தொடர் போராட்டத்தால், அந்நாட்டு அரசுக்கு கடும்  நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீஃபை அவர் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக்-ஏ-இன்ஸாஃப் கட்சியினரும், மதகுரு தாஹிருல் காத்ரியின் அவாமி தெஹிரீக் கட்சியினரும் கடந்த 13 நாள்களாக அரசுக்கு எதிரான தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அங்கு கடும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் ராணுவ தலைமைத் தளபதி ரஹீல் ஷெரீஃபை நவாஸ் ஷெரீஃப் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போதைய சூழல் உள்ளிட்ட ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலவரம் குறித்து பிரதமரும், ராணுவ தலைமைத் தளபதியும் ஆலோசனை நடத்தினர்.

நாட்டின் நலன் கருதி, தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்று இருவரும் வலியுறுத்தினர்“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்