’என் மரணத்திற்கு காரணமான தாயை கொன்றுவிடவும்’ - கடிதம் எழுதிவைத்து மாணவன் தற்கொலை

புதன், 10 பிப்ரவரி 2016 (13:31 IST)
எனது மரணத்திற்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும் என கடிதமெழுதிவிட்டு மாணவனொருவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
 

 
தற்கொலை செய்து கொண்டவர் பொகவந்தலாவை கொட்டியாகலை கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் மாணவன் ஜேசுதாஸ் மில்ரோய் பெர்னாண்டோ [வயது 14] என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 
இந்த மாணவர், பொகவந்தலாவையில் உள்ள செயிண்ட் மேரீஸ் மத்திய கல்லூரியில் 9ஆம் வகுப்பு பயின்று வந்ததாக காவல் துறையினர் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
 
பெர்னாண்டோ, தனது தாய் சகோதரியை பள்ளிக்கு அழைத்து சென்ற வேளையிலேயே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் காவல் துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
 
மேலும், பெர்னாண்டோ இறந்து கிடந்த இடத்தின் அருகிலுருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் “எனது மரணத்திற்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும்” என எழுதியுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
அதே நேரம், தற்கொலை செய்துகொள்வதற்கு முதல் நாள் பெர்னாண்டோ பொகவந்தலாவை கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் இடம்பெற்ற மரணவீட்டிற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
 
இதனால், மாணவனின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை கண்டறிவதற்காக காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
 
உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்குப் பிறகு  உறவினர்களிடம் ஒப்படைக்கபடவுள்ளதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்