டிரம்பை எதிர்க்க ஆஸ்கர் விழாவை புறகணித்த ஈரான் இயக்குனர்!!

திங்கள், 27 பிப்ரவரி 2017 (10:58 IST)
89வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 


 
 
சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான ஆஸ்கர் விருதுக்கு லேண்ட் ஆப் மைன் (டென்மார்க்), எ மேன் கால்ட் ஓவ் (ஸ்வீடன்), தி சேல்ஸ்மேன் (ஈரான்), டான்னா (ஆஸ்திரேலியா), டோனி எர்ட்மேன்(ஜெர்மனி) ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டன.
 
அதில், ஈரானை சேர்ந்த அஸ்கர் ஃபர்ஹதி இயக்கிய தி சேல்ஸ்மேன் படத்திற்கு சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான விருது வழங்கப்பட்டது. விருதை வாங்க அவர் நேரில் வரவில்லை.
 
ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர அதிபர் டிரம்ப் தடை விதித்ததால், அஸ்கர் விருதை வாங்க அஸ்கர் அமெரிக்கா வரவில்லை. 
 
ஆனால் அவருக்கு பதில் விருதை அனௌஷே அன்சாரி பெற்றுக்கொண்டார். அப்பொழுது அஸ்கர் எழுதிக் கொடுத்த கடிதத்தை வாசித்தார். 
 
அதில், இந்த விருதை இரண்டாவது முறை பெறுவதில் பெருமைப்படுகிறேன். இன்று விழாவில் கலந்து கொள்ளாததற்கு மன்னிக்கவும். என் நாடு மற்றும் 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வர தடை விதித்து மனிதநேயமற்ற சட்டத்தால் அவமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அந்த 7 நாடுகளை சேர்ந்தவர்களை மதித்து நான் விழாவுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.
 
இந்த நிகழ்வால் டிரம்பின் மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும், டிரம்ப் பலரின் விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்