இலங்கை அதிபர் தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு... வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது எப்போது?

Siva

வெள்ளி, 26 ஜூலை 2024 (09:31 IST)
இலங்கையில் அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது இலங்கையில் ரணில் விக்ரமசிங்க அதிபராக இருக்கும் நிலையில் அவரது பதவி காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனை அடுத்து செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் இலங்கைக்கு அதிபர் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்றுமுன் இலங்கை தேர்தல் ஆணையம் செப்டம்பர் 21ஆம் தேதி இலங்கை அதிபர் தேர்தல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..
 
இந்த தேர்தலில் ஏற்கனவே அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில் அவரை எதிர்த்து முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
 
இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி காரணமாக மிகப்பெரிய புரட்சி வெடித்ததால் அப்போதைய அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார்.  அதன் பிறகு ரணில் விக்ரமசிங்க அதிபர் பதவியை ஏற்ற நிலையில் தற்போது மீண்டும் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
 
இந்த முறை ரணில் விக்ரமசின்க வெற்றி பெறுவாரா அல்லது சரத் பொன்சேகா வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்