டி 20 போட்டியில் மட்டும் விளையாடினா எப்படி கேப்டன்சி கிடைக்கும்?- ஹர்திக் விவகாரத்தில் நெஹ்ரா பதில்!

vinoth

வியாழன், 25 ஜூலை 2024 (17:09 IST)
உலகக் கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் இனிமேல் டி 20 அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டி 20 அணிக்குக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்வை கேப்டனாக இந்திய அணி நிர்வாகம் நியமித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் இனி இந்திய அணிக்குக் கேப்டன் பொறுப்புக்கான வீரர்கள் பட்டியலில் இடம்பெற மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஏன் கேப்டன்சி அளிக்கப்படவில்லை என்பது குறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் “ஹர்திக் பாண்ட்யா அணிக்கு முக்கியமான வீரர்தான். அவர் திறமையான வீரராக இருந்த போதும் அவரின் பிட்னெஸ் சவாலளிக்கக் கூடியதாகவே உள்ளது.  எல்லா நேரத்திலும் விளையாட தகுதி வாய்ந்த கேப்டன்தான் இந்திய அணிக்குத் தேவை” என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா “இந்திய அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் வீரரே கேப்டன் பொறுப்புக்குத் தகுதியானவர் என்று அகார்கர் கூறியுள்ளார். ஹர்திக் பாண்ட்யா டி 20 போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார். அவர் உலகக் கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. டெஸ்ட் போட்டிகளுக்கு இன்னும் அவர் உடல்தகுதி பெறவில்லை. அப்புறம் எப்படி அவருக்குக் கேப்டன் பதவி வழங்கப்படும்” எனக் கேட்டுள்ளார். நெஹ்ராவும், ஹர்திக் பாண்ட்யாவும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இரண்டு ஆண்டுகள் இணைந்து பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்