சேலம் மாநகராட்சி நடவடிக்கைகள் மற்றும் ஒப்பந்த முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி, திமுக 45வது வார்டு உறுப்பினர் சுஹாசினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தீவிரமான நிலைக்கு சென்றதால், சுஹாசினி அவர் கன்னத்தில் அறைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சேலம் மாநகராட்சி கூட்டத்தின்போது, குடிநீர் விநியோகம், சொத்துவரி உயர்வு மற்றும் கழிவுநீர் கால்வாய் பணிகள் தொடர்பாக பல்வேறு குறைகள் முன்வைக்கப்பட்டன. இதில், யாதவமூர்த்தி, அமைச்சரின் ஆதரவாளர்கள் அதிக தொகைக்கான ஒப்பந்தங்களை பெறுவதாக குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்க விரைந்த திமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் மேயர் இருக்கை முன்பு திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் சில உறுப்பினர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன், சம்பந்தப்பட்டவார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பின்னர், போராட்டம் கலைந்தது.