போகோ ஹரம் தீவிரவாதிகள் பிடியில் இருந்து சிறுமிகள் உள்பட 63 பேர் தப்பினர்

திங்கள், 7 ஜூலை 2014 (11:45 IST)
நைஜீரியாவில் போகோ ஹரம் தீவிரவாதிகள் பிடியில் இருந்து சிறுமிகள் பெண்கள் உள்ளிட்ட 63 பேர் தப்பி வந்தனர்.

நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோ ஹரம் தீவிரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கான பொது மக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி போர்னோ மாகாணத்தில் கிபக் நகரில் 300 பள்ளி மாணவிகளைக் கடத்திச் சென்றனர். அவர்களை விடுவிக்க தங்களது அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை விடுதலை செய்ய நிபந்தனை விதித்தனர்.

ஆனால் அதை ஏற்க நைஜீரிய அரசு மறுத்துவிட்டது. எனவே கடத்தப்பட்டு பல நாட்களாகியும் மாணவிகள் தீவிரவாதிகளின் பிடியிலேயே உள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் போர்னோ மாகாணத்தின் வடகிழக்கில் உள்ள தம்போவா நகரம் அருகே கிராமங்களில் புகுந்த தீவிரவாதிகள் மீண்டும் பெண்கள் சிறுமிகள் உள்ளிட்ட 68 பேரை கடத்தி சென்றனர்.

இந்நிலையில்  தீவிரவாதிகளின் பிடியில் இருந்து 63 பெண்கள் மற்றும் சிறுமிகள் தப்பி வந்துள்ளனர். இந்தத் தகவலை அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே தம்போவா அருகேயுள்ள ராணுவ தளத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்