சிரியா ராணுவ விமானதளத்தில் தாக்குதல்...

திங்கள், 9 ஏப்ரல் 2018 (21:50 IST)
சிரியாவில் உள்ள ராணுவ விமானதளம் ஒன்றில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், பலர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
 
ஹோம்ஸ் நகரம் அருகில் உள்ள தய்ஃபூர் விமான தளத்தில் திங்கட்கிழமை அதிகாலை இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பு என்று இன்னும் தெரிய வரவில்லை.
 
டூமாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், இச்சம்பவம் சர்வதேச எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்நிலையில் சிரியாவின் அதிபர் அசாத் ஒரு மிருகம் என குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இதற்கு பின்னால் இருக்கும் ரஷ்ய அதிபர் புதின் மற்றும் இரான்தான் இதற்கு பொறுப்பு என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
 
தய்ஃபூர் விமானத்தளத்தில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல நடத்தியது அமெரிக்கா என சந்தேகிப்பதாக சிரியாவின் அரசு ஊடகம்கூறியது, ஆனால் பின்பு அதிலிருந்து பின்வாங்கியது.
 
தங்கள் மீதான இந்த குற்றச்சாட்டை அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர். தற்போது, அமெரிக்க பாதுகாப்புத்துறை எந்த விதமான தாக்குதல்களையும் நடத்தவில்லை என பென்டகன் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்