பஹ்ரைனில் விநாயகர் சிலையை உடைத்த பெண் கைது!

திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (13:59 IST)
பஹ்ரைனில் விநாயகர் சிலையை உடைத்த பெண் கைது!
பக்ரைன் நாட்டில் கடைக்குச் சென்ற பெண் ஒருவர் அங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோவை இங்கு உள்ள சிலர் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்த போது மதச்சார்பற்ற நடுநிலைவாதிகள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்ளும் சிலர் ஏதோ ஒரு நாட்டில் நடந்த சம்பவத்தை சம்பவத்தின் வீடியோவை இங்கு பதிவு செய்து ஏன் மதக்கலவரத்தை தூண்டுகிறார்கள் என்று தங்களது போலியான நடுநிலை கருத்தை பதிவு செய்தனர் 
 
இந்த நிலையில் பக்ரைன் நாட்டு அரசு, எந்த ஒரு மதத்தை இழிவுபடுத்தினாலும் குற்றம் என்றும், அது கண்டிக்கத்தக்கது என்று இன்று காலை தெரிவித்திருந்த நிலையில் அந்த பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
பஹ்ரைன் நாட்டின் தலைநகரான மனாமா என்ற நகரில் கடைக்கு சென்ற 54 வயது பெண் ஒருவர் திடீரென அங்கிருந்த விநாயகர் சிலைகளை எடுத்து கீழே போட்டு உடைத்தார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த நிலையில் அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் மீது மத அடையாளங்களை இழிவுபடுத்திய குற்றத்திற்கான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் 
 
இந்த நிலையில் பஹ்ரைன் மன்னரின் ஆலோசகரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான காலித் அவர்கள் கூறும்போது ’அந்த பெண்ணின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், மத அடையாளங்களை மீறுவது பஹ்ரைன் மக்களின் இயல்பு அல்ல என்றும், இது ஒரு குற்றம் என்றும் கூறினார். மேலும் பஹ்ரைனில் அனைத்து மதங்களும், பிரிவுகளும், மக்களும் இணைந்து வாழ்கின்றனர் என்றும், சிறிய முஸ்லீம் நாட்டில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஆசிய தொழிலாளர்கள் வாழ்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்