தமிழர் படுகொலை விடியோ வெளியீடு: பிரிட்டனுக்கு இலங்கை கடும் எதிர்ப்பு

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2009 (19:02 IST)
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் பட்டவர்த்தனமான காட்சிகளை பிரிட்டனின் 'சேனல் - 4' தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியது தொடர்பாக இலங்கை தனது எதிர்ப்பினை பிரிட்டனுக்கு தெரிவிக்க உள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திரக் கூட்டத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய இலங்கை ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, இராஜதந்திர ரீதியாக இந்த விவகாரத்தை பிரிட்டனுடன் சிறிலங்கா அரசு கையாளும் எனத் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது :

சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு குழு, இந்த விடியோவை தமக்கு வழங்கியதாகவும், அதன் நம்பகத்தன்மைக்குத் தாம் பொறுப்பல்ல என்றும் 'சேனல் - 4' தெரிவித்திருந்தது.

ஆனால், இதே விடியோ காட்சிகள் சிஎன்என், அல்ஜசீரா உள்ளிட்ட பல செய்தி ஊடகங்களில் எந்தவித அறிவிப்பும் இன்றி வெளியிடப்பட்டுள்ளன.காட்சிகள் பார்ப்போரின் மனதைப் பாதிக்கக்கூடும் என்ற எச்சரிக்கையை மட்டுமே அவை வெளியிட்டன.

இந்த முக்கியமான காலகட்டத்தில் சிறிலங்காவினதும் அதன் படையினரதும் நற்பெயரைக் கெடுப்பதுதான் இந்தக் காணொலியை ஒளிபரப்பியமைக்கான காரணம் என்பது மிகத் தெளிவாக உள்ளது.

அந்தக் விடியோ காட்சிகளை இரு வேறு கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு ஆணித்தரமாக சிறிலங்கா அரசு மறுக்கிறது.எமது நாட்டின் நற்பெயரை களங்கப்பபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே இதனை நாம் கருத்தில் கொள்வோம்.

தமது பரப்புரைகள் ஊடாக வன்னியில் படையினர் மேற்கொண்ட மனிதாபிமான மீட்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும் விடுதலைப் புலிகளைக் காப்பாற்றவும் முயன்றவர்களின் மற்றுமொரு செயல் இதுவாகும்.

உலகிலேயே மிக ஒழுக்கமான சிறிலங்காப் படையினரை அவமானப்படுத்த இப்போது அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்காததால் இந்த உபாயத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் இதை சும்மா விடப்போவதில்லை.எமது படையினருக்கு எதிராக இதுபோன்ற அவதூறு பரப்புரை தொடர்ந்தும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை 'சேனல் - 4' நிறுவனமும் பிரிட்டன் அரசும் மேற்கொள்ள வேண்டும்.

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் ஏற்கனவே 'சேனல் - 4' நிறுவனத்திற்கு தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது .
சிறிலங்கா பற்றிய வந்திகளும் அரைக் குறைத் தகவல்களும் பரப்படுவதற்கு மேற்குலக ஊடகங்கள் களமாக விளங்குகின்றன என்றும் யாப்பா மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்