ஊடகவியலாளர்களை மிரட்டும் இலங்கை அமைச்சர்

சனி, 24 மார்ச் 2012 (18:49 IST)
மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் கை கால்களை முறிப்பேன் என்று இலங்கை அமைச்சர் மெர்வின் சில்வா எச்சரித்துள்ளார்.

ஜெனிவாவில் இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து, இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைச்சரின் இந்த பேச்சு அமைந்திருக்கிறது.

இலங்கைக்கு எதிரான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரசை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் குறித்து இலங்கை அரசும், அரசு ஆதரவு ஊடக நிறுவனங்களும் கடந்த சில வாரங்களாகவே விமர்சனங்களை முன்வைத்து வந்தன.

இந்நிலையில், ஜெனிவா ஐ.நா. மன்றத்தில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து இந்த விமர்சனம் தீவிரமடைந்துள்ளன.

இதனிடையே நேற்று, இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் உரையாற்றிய, அந்நாட்டு அமைச்சர் மெர்வின் சில்வா- மனிதஉரிமை ஆர்வலர்கள் சுனந்த தேசப்பிரிய, நிமல்கா பெர்னாண்டோ, பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோரின் கால்களை முறிப்பேன் என்று பேசியுள்ளார்.

அத்துடன் மனிதஉரிமைகள் விவகாரத்தில் இலங்கை அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த ஊடகவியலாளர் போத்தல ஜயந்தவை இலங்கையை விட்டு தான் அடித்து விரட்டியடித்ததாகவும் மெர்வின் சில்வா கூறியுள்ளார்.

News Summary:

A Sri Lankan cabinet minister has threatened violence against journalists and human rights activists who he says have been opposing the government.

வெப்துனியாவைப் படிக்கவும்