ஈராக்கில் ஆக.31 முதல் அமெரிக்கப் படை தாக்குதல் நிறுத்தம்: ஒபாமா

செவ்வாய், 3 ஆகஸ்ட் 2010 (19:37 IST)
இம்மாதம் 31 ம் தேதி முதல் ஈராக்கில் தாக்குதல் நடத்துவதை அமெரிக்கப் படையினர் நிறுத்திக்கொள்வார்கள் என அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில், ஈராக் போரில் பங்கேற்று ஊனமடைந்த அமெரிக்கப் படையினரிடையே உரையாற்றுகையில், ஒபாமா இத்தகவலை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ஈராக்கில் வரும் 31 ஆம் தேதி முதல் அமெரிக்கப் படைகள் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிடாது. அந்தப் பணியை ஈராக் படைகளிடமே ஒப்படைக்கவுள்ளோம் என்றும், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்றும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றவுடன், ஈராக்கிலிருந்து 50,000 படையினரை வாபஸ் பெற்ற நிலையில்,தற்போது அங்கு 65,000 அமெரிக்கப் படையினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்