இந்திய விசாரணைக் குழுவை அனுமதிப்பது குறித்து ஆய்வு: பாக்.

வியாழன், 3 மார்ச் 2011 (20:02 IST)
மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கில் பாகிஸ்தானில் உள்ள சில சந்தேக குற்றவாளிகளை விசாரிக்க இந்திய விசாரணைக் குழுவை அனுமதிப்பது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கில் பாகிஸ்தானில் உள்ள சில சந்தேக குற்றவாளிகளை விசாரிக்க இந்தியக் குழுவை அங்கு அனுப்புவது குறித்து அந்நாட்டின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்திய விசாரணைக் குழுவை பாகிஸ்தான் அனுமதித்தால், பாகிஸ்தான் விசாரணைக் குழுவும் இந்தியா வர அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் ஜனுஜா, இந்திய விசாரணைக் குழுவை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான தகவல் இந்திய அரசிடமிருந்து நேற்று வந்ததாகவும், இது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்