அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம்: பாகிஸ்தான் விருப்பம்!

வெள்ளி, 25 ஜூலை 2008 (17:00 IST)
இந்தியாவுடன் அமெரிக்கா அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதால் தங்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை எனத் தெரிவித்த பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர், தாங்களும் அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள பாகிஸ்தான் அயலுறவு அமைச்சர் மெஹ்மூத் குரேஷி, ‘டான’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைப் போன்றதொரு புதிய ஒப்பந்தத்தை பாகிஸ்தானுடனும் அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவைப் போல் வல்லரசு நாடான பாகிஸ்தானிலும், எதிர்கால மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய இதுபோன்ற ஒரு ஒப்பந்தம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகள் எல்லை தாண்டி சதிச்செயலில் ஈடுபடுகின்றனர் என ஆப்கானிஸ்தான் அரசு குற்றம்சாட்டியுள்ளது குறித்து செய்தியாளர்கள் அப்போது கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஒரு லட்சம் வீரர்களைக் குவித்துள்ளதுடன், 1,000 சோதனைச் சாவடிகளை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தமது அரசு தீவிரப்படுத்தியுள்ளதாகக் கூறினார். ஆனால் ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் 100 சோதனைச் சாவடிகளே உள்ளதால் தீவிரவாதிகள் ஊடுருவலை முழுவதுமாக தடுக்க முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்