சோமாலிய பஞ்சப்பசியில் 2,58,000 மக்கள் சாவு; அதிர்ச்சி தகவல்

வெள்ளி, 3 மே 2013 (13:04 IST)
FILE
சோமாலியாவில் வறுமை மற்றும் பசிக்கொடுமை காரணமாக ஏறத்தாழ இரண்டு லட்சத்து ஐம்பத்தெட்டாயிரம் மக்கள் பலியாகி உள்ளதாக ஐ.நா.அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

2010 - 2012 ஆண்டுகளில் சோமாலியாவில் நிலவிய கடும் வறுமைக் காரணமாகவும் பசியின் காரணமாகவும் இறந்துள்ள 258,000 மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறி்க்கையினை ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பும், பஞ்ச முன் எச்சரிக்கை அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பாக 1992 ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக ஏறத்தாழ 220,000 மக்கள் பலியாகினர். பஞ்சத்தினால் மக்கள் பாதிக்கப்பட்ட போது, தேவையான நடவடிக்கைகளை ஐ.நா. எடுக்கவில்லை என ஐ.நா.வின் மனிதச்சேவை ஒருங்கிணைப்பாளர் பிலிப் லசாரினி தெரிவித்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் வறட்சி ஏற்பட்டதுமே, எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டிருந்தபோதும் மக்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என லசாரினி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 2010 மற்றும் ஏப்ரல் 2012 க்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக இறந்தவர்களில் ஏறத்தாழ 133,000 பேர் குழந்தைகளாவர். ஏறத்தாழ ஒரு கோடி 30 லட்சம் மக்கள் இந்த பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சம் என்பது இயற்கையானதல்ல, அது மோசமான அரசியல் தவறினால் ஏற்படும் ஒன்று என ஆக்ஸ்பேம் அமைப்பின் சோமாலியாவிற்கான இயக்குனர் செனைட் ஜெப்ரெக்ஸியாபர் குற்றம் சாட்டியுள்ளார். வறட்சி ஏற்பட்டதும் நடவடிக்கை எடுக்காமல் தாமதித்ததினால் பல மக்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

வரும் செவ்வாய் சோமாலியா அதிபர் ஹஸன் ஷேக் முஹம்மத், இங்கிலாந்து பிரதமர் காமரூனுடன் இணைந்து லண்டனில் சர்வதேச சமூகம் சோமாலியாவிற்கு எவ்வகையிலான உதவிகளை அளிக்கலாம் என்பது பற்றிய ஒரு மாநாடு நடத்தவுள்ளார். இதில் ஏறத்தாழ 50 நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகள் கலந்து கொள்ளவுள்ளன.

வறுமையினால் மக்கள் பலியாவதைத் தடுப்பதற்கு போதுமான அளவு தாம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் ஐ.நா. அந்த அறிவிக்கையில் ஒத்துக் கொண்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்