இந்தியாவில் 1,300 புலிகளே உள்ளன : அதிர்ச்சித் தகவல்!

Webdunia

வியாழன், 30 ஆகஸ்ட் 2007 (15:52 IST)
இந்தியாவின் தேசிய விலங்கு புலி. ஆனால் இந்த புலிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் குறைந்து கொண்டே வந்து தற்பொது வெறும் 1,300 புலிகளே எஞ்சியுள்ளன என்றால் அதை நம்பமுடிகிறதா?

நம்பித்தான் ஆகவேண்டும் என்கிறார் பிரபல வனப்பாதுகாப்பு நிபுணர் வால்மிக் தாப்பர்.

2002 ஆம் ஆண்டு புலிகளின் காலடித் தடங்களை ணக்கெடுத்து சுமார் 3,600 புலிகள் எஞ்சியிருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த கணக்கெடுப்பு பிறகு அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய ஆய்வுத் தகவலின்படி பார்த்தால் இந்தியாவில் புலிகள் இனம் இன்னமும் சில நாட்களில் முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் உள்ளது என்று வால்மிக் தாப்பர் எச்சரித்துள்ளார்.

தற்போதைய ஆய்வை நடத்திய குழுவின் தலைவர், இந்திய வனவிலங்குகள் உயிரியல் ஆய்வில் உள்ள குறிப்பிடத்தகுந்த சிலரின் பட்டியலில் உள்ள டாக்டர் ஜே.வி. ஜலா என்பவர்.

இந்திய வனவிலங்குக் கழகத்திலிருந்து சிலர் மற்றும் பயிற்சி பெற்ற வன அதிகாரிகள் ஆகியோர் டாக்டர் ஜே.வி. ஜலா தலைமையில் இந்த மாரத்தான் ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்தக் குழு இந்திய வனங்களில் 352,000 மனித நாட்களை செலவழித்துள்ளது, 21,989 வனங்களில் நுழைந்து மாதிரிகளை சேகரித்துள்ளது, இதற்காக 1,32,000 கி.ீ. தூரத்தை கால் நடையாக கடந்து சென்றுள்ளது.

புலால் உண்ணும் பாலூட்டியின அடையாளங்கள் உள்ள 3,30,000 கிமீ தூரத்தை பிரயாணித்துள்ளது இந்தக் குழு.

முதலில் இவர்கள் புலிகள் அதிகமாக புழங்கும் இடம், சுமாராக புழங்கும் இடம் மற்றும் குறைவாக புழங்கும் இடம் என்று வரைபட மாதிரிகளை உருவாக்கியுள்ளனர், பிறகு தாங்கள் சேகரித்த புலிகள் புழக்க தடங்களின் மாதிரிகள் சேகரித்த அனைத்து இடங்களிலும் காமிராக்களை வைத்து கண்காணித்தனர். இதன் மூலம் இந்திய வனங்களில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையை இவர்கள் கனகச்சிதமாக விஞ்ஞானப்பூர்வமாக நிர்ணையித்துள்ளனர்.

இந்த புதிய கணக்கீடுகளின் உதவியுடன் புலிகள் அதிகம் வசிக்கும் வனப்பகுதிகள் மற்றும் பிபகுதிகளில் புலிகள் மேலும் அழியாமல் தடுப்பதுடன் அதன் இனத்தை பெருக்கவும் வழி வகை செய்முடியும் என்கிறார் வனப்பாதுகாப்பு நிபுணர் வால்மிக் தாப்பர்.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பிபிசி வனவிலங்குகள் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ள மற்றுமொரு தகவல் மேலும் அதிர்ச்சியளிப்பதாயுள்ளது. அதாவது கடந்த 10 ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை 41 சதவீதமாக குறைந்துள்ளது என்பதே அந்த தகவல்.

உலக வனவிலங்குகள் நிதியத்தின் டாக்டர் எரிக் டைனர்ச்டெய்ன் மற்றும் அதனைச் சேர்ந்த 15 நிபுணர்கள் இது குறித்து கூறுகையில், "அடுத்த அரை நூற்றாண்டில் புலிகள் இனம் ஒட்டுமொத்தமாக அழிய வாய்ப்பில்லை எனினும், தற்போதைய நிலவரம் மிகவும் மோசமானதாகவே உள்ளது" என்று கூறியுள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலை தொடருமாயின் வனவிலங்குகள் மொத்தமும் அழிந்து சூழலியல் பேரழவிக்கு இட்டுச் செல்லும் என்று இவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் புலிகளின் மரபான வசிப்பிடங்களை குறுக்கிக் கொண்டே வந்துள்ளது, உணவுப் பற்றாக்குறை காரணமாக புலிகள் ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பான பகுதிகளிலேயே இருந்து வருகிறது.

பாரம்பரிய சீன மருந்து உற்பத்திக்காக புலிகளை வேட்டையாடுவது என்பது இன்னமும் பரவலாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கார் வனத்தில் புலிகளே இல்லாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வுகளின் அதிர்ச்சி தரும் தகவல்களால் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் புலிகள் வேட்டைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார்.

மத்திய அரசால் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் ஒன்றும் புலிகள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த ஆணையத்தாலும் வனவிலங்குகளின் அழிவை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஆனால் நிலைமை அவ்வளவு கவலைக்கிடமாயில்லை என்று மற்றொரு நிபுணர் கூறியுள்ளர். அனில், முயல்கள் போலவே சரியான சுற்றுச்சூழல் கொடுக்கப்பட்டால் புலிகளும் இனப்பெருக்கம் செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புலிகள் வசிப்பிடங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு புலிகள் ஓரிடம் விட்டு வேறிடம் செல்ல வழி வகை செய்தால் ஓரளவு நிலைமைகளை சமாளிக்கலாம் என்று இந்த நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

ஆனால் நிலைமைகள் நம்பிக்கை அளிப்பதாயில்லை என்றே தெரிகிறது. நமது தேசிய விலங்கு முற்றிலும் அழியும் நாட்கள் எண்ணப்பட்டு விடலாம் என்றே தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்