நமது பூமியின் இரு புறத்திலும் அமைந்திருப்பது செவ்வாய், வெள்ளி கிரகங்களாகும். இதில் பூமிக்கு மிக அருகில் அமைந்திருப்பது வெள்ளி கிரகம்தான். அன்பு மற்றும் அழகுக்கான ரோமானியக் கடவுளின் பெயரில் இக்கிரகத்துக்கு `வீனஸ்' என்று பெயரிடப்பட்டது.
சூரியன், நிலாவிற்குப் பிறகு வெள்ளி மிகவும் பிரகாசமான கோள் ஆகும். சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகிய இரண்டு வேளைகளிலும் வெள்ளிக் கிரகத்தைக் காண முடியும்.
webdunia photo
WD
விண்ணியல் ஆய்வாளர்கள் ஒரு காலத்தில் வெள்ளியும் பூமியும் இரட்டைப் பிறவி என்று கருதினார்கள். ஏனெனில் வெள்ளியின் குறுக்களவு ஏறக்குறைய பூமியை ஒத்திருக்கிறது. அதாவது இதன் குறுக்களவு, பூமியை விட 650 கிலோ மீட்டர்கள் தான் குறைவானது. பூமியுடன் ஒப்பிடுகையில் 81.5 சதவீதம் நிறை கொண்டது.
ஆனால், இதைத் தவிர பூமிக்கும், வெள்ளிக்கும் வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. மனிதர்கள் வாழ தகுதியற்ற கிரகம் வெள்ளி.
வெள்ளி கிரகத்தின் புறவெளி மிகவும் வேறுபாடானது. இது 95 சதவீதம் கரியமில வாயுவால் சூழப்பட்டுள்ளது. அது தவிர, அடர்த்தியான கந்தக அமில மேகங்களால் சூழப்பட்டுள்ளது. அதுவே வெள்ளியின் உட்பரப்பைக் காணத் தடையாக உள்ளது. இந்த மேகங்கள் சூரிய ஒளியின் 76 சதவீதத்தைப் பிரதிபலிப்பதால் வெள்ளி மிகவும் பிரகாசமான கிரகமாகத் தோன்றுகிறது.
சூரியக் குடும்பத்திலேயே மிகவும் சூடான கிரகமாகும் இது. அதாவது புதன் கிரகத்தை விட இரு மடங்கு வெப்பமானது. இத்தனைக்கும் சூரியனிலிருந்து புதனைப் போல இருமடங்கு தொலைவில் வெள்ளி அமைந்துள்ளது.
சூரியனின் வெப்பம், வெள்ளிக் கிரகத்துக்குள் கரியமில வாயுவால் தக்க வைக்கப்படுவதுதான் அதிக வெப்பத்திற்குக் காரணம்.
வெள்ளியில் சாதாரணமாக நிலவும் தட்பவெப்ப நிலையான 460 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் காரீயம் கூட உருகிவிடும். இக்கிரகத்தில் காணப்படும் புறவெளி அழுத்தமும் மிக அதிகமானது. அதாவது கடலுக்குள் ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் நீந்துவது போன்ற அழுத்தம் இங்கு நிலப்பரப்பில் காணப்படுகிறது.
பிரகாசமாகவும் அழகாகவும் இருக்கும் வெள்ளி பார்த்து ரசிக்கத்தான் உகந்தது. அங்கு சென்று மனிதர்கள் வாழ்வதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க இயலாது.