குழந்தை குற்றங்களுக்கு என்ன காரணம்? பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?

ஞாயிறு, 12 மார்ச் 2017 (23:03 IST)
கடந்த சில நாட்களாக குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதை சமூக ஆர்வலர்கள் கவலையுடன் பார்த்து வருகின்றனர். ஒரு குற்றம் நடந்தபின்னர் காவல்துறை அதற்குரிய விசாரணை செய்து தண்டனையும் குற்றவாளிகளுக்கு வாங்கி கொடுக்கின்றது. ஆனால் அந்த குற்றம் நடைபெறாமல் தடுப்பது ஒரு சமூகத்திடம்தான் உள்ளது. குறிப்பாக ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் அந்த கடமை உள்ளது.



முன்பெல்லாம் வீட்டில் உள்ள பெரியோர்கள், தாத்தா பாட்டிகள் குழந்தைகளுக்கு நீதிக்கதைகளை சொல்லும் வழக்கம் இருந்தது. ஆனால் இப்போது அப்பா ஒரு பக்கம் மொபைலில் ஏதாவது பார்த்து கொண்டிருப்பார், அம்மா சீரியல் பார்த்து கொண்டிருப்பார், குழந்தைகள் இன்னொரு புறம் மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் எதையாவது பார்த்து கொண்டிருப்பார்கள். ஒரே வீட்டில் இருந்தாலும் குழந்தைகளுடன் பெற்றோர்கள் செலவிடும் நேரம் மிக குறைவாக உள்ளது. அப்படியே குழந்தைகளிடம் பேசினாலும் அவர்களுக்கு நீதிபோதனை, அறிவுரைக்கதைகள் சொல்லி கொடுக்கும் வழக்கம் இப்போது சுத்தமாக இல்லை

ஒரு குடும்பத்தில் ஜனநாயகமான தன்மையோடும், எது பற்றியும் தயக்கமில்லாமல் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளூம் வழக்கத்தையும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டியது பெற்றோரின் அடிப்படை கடமை. இன்னும் சொல்ல போனால் அது குழந்தையின் உரிமையும்கூட.

ஒரு குற்றம் நடந்தபின்னர் அந்த குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனையோ அல்லது குற்றம் நடந்த பகுதியின் காவல் துறை அதிகாரியைப் பணிமாற்றம் செய்தாலோ குற்றங்கள் குறையாது. குற்றங்களைக் குறைப்பதும், குற்றங்கள் இல்லாத சூழலை உருவாக்குவதும் எப்படி ஒரு அரசின் தலையாய கடமையோ அதேபோல் குழந்தைகள் மனதில் குற்றங்கள் செய்யும் மனப்பான்மை இல்லாமல் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை.

இதைப் பற்றி சிந்திக்க யாருக்குமே நேரம் இல்லாததால் தான் குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.  நல்ல சமூகமாக நாம் இருக்க வேண்டுமென்றால், குழந்தைகளுக்கு ஆடம்பரப் பொருளை வாங்கித் தருவதில் கவனம் செலுத்தாமல், நல்ல கல்வி, நல்ல இயற்கை சூழல், நல்ல பழக்கவழக்கங்கள், சமூக அக்கறை, குடும்பச் சூழல், ஆண் பெண் புரிதல் இவற்றைப் போதிக்க வேண்டும். அவர்கள் வளர்ந்த பின்பு கிடைக்கும் நல்ல சூழ்நிலைகள் மூலமே குற்றங்களைக் குறைக்க முடியும். வெறும் சட்டங்களை இயற்றினால் குற்றங்கள் ஒழியாது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்