நொறுக்குத் தீனி சாப்பிடுவதில் பெண்கள், குழந்தைகளுக்கு முதலிடம்!
Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2007 (14:00 IST)
இரவு உணவுக்கு முந்தைய தேநீர் அருந்தும் காலம் நொறுக்குத் தீனி உண்பவர்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என்றால் அது மிகையாகாது. இது தொடர்பான ஆராய்ச்சியில் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் வாழும் பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் ஆரோக்கியமில்லாத உணவுப் பண்டங்களை அதிகமாக சாப்பிடுவது தெரிய வந்துள்ளது.
நூடுல்ஸ், சிப்ஸ், பிஸ்தா, பிஸ்கட்டுகள், பேக்கரிப் பண்டங்கள் ஆகியவற்றை மாலை 5 முதல் 7 மணி வரையிலான நேரத்தில் 88 விழுக்காடு பெண்களாலும், குழந்தைகளாலும் சாப்பிடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் வாழ்பவர்களில் 42 விழுக்காட்டினர் சற்று கூடுதலாக தேநீர் அருந்தும் போது, உணவுக்கு முன்னதாக என்று இரண்டு முறை நொறுக்குத் தீனி உட்கொள்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு, திருவிழா காலமான அக்டோபர், நவம்பர் மாதத்தில் நாட்டின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரூ ஆகிய இடங்களில் நடுத்தர, மேல்தட்டு வர்கத்தைச் சேர்ந்த 28 முதல் 40 வயதுக்குட்பட்ட வேலைக்குச் செல்லும், வீட்டில் இருக்கும் பெண்களிடமும், 5 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமும் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது வழக்கமாக உரிய கால இடைவெளியில் அவர்கள் உட்கொள்ளும் உணவு வகைகளுடன், இரவு உணவுக்கு முந்தைய தேநீர் நேரத்தின் போது சாப்பிடும் நொறுக்குத் தீனிகள் குறித்தும் கேட்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இரவு உணவுக்கு முந்தைய நேரத்தில் உடல் நலனுக்கு உதவாத பல்வேறு வகையான நொறுக்குத் தீனிகளை மக்கள் அதிக அளவில் சாப்பிடுவது தெரியவந்துள்ளது. மும்பையில் 84 விழுக்காடு பெண்களும், 75 விழுக்காடு குழந்தைகளும், பெங்களூருவில் 95 விழுக்காடு பெண்களும், 88 விழுக்காடு குழந்தைகளும், சென்னையில் 85 விழுக்காடு பெண்களும், 82 விழுக்காடு குழந்தைகளும், நாட்டிலேயே அதிகபட்சமாக கொல்கத்தாவில் 92 விழுக்காடு பெண்களும், குழந்தைகளும் நொறுக்குத் தீனி சாப்பிடுவது தெரியவந்துள்ளது.
மக்கள் சாப்பிடும் நொறுக்குத் தீனிகளில் உடல் நலனுக்கு ஆரோக்கியமானது, ஆரோக்கியமற்றது எது என்பது தொடர்பான இந்த ஆய்வை, நாடு முழுவதும் உள்ள உணவு, ஊட்டச்சத்து நிபுணர்கள் வரவேற்றுள்ளனர். உணவுக்கு முந்தைய நொறுக்குத் தீனி உண்ணும் பழக்கம் அண்மைக்கால வாழ்க்கை முறை மாற்றத்தால் உருவானது என்று டெல்லி அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் கருணா கூறியுள்ளார். நாம் உட்கொள்ளும் உணவு வகைகளைச் சத்துள்ளதாக மாற்றிக் கொண்டால் போதுமானது என்றும் தெரிவித்துள்ளார்.