பசும்பால் குடித்தால் அறிவு வளரும்!
திங்கள், 3 டிசம்பர் 2007 (17:32 IST)
பாரம்பரிய பசும்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள், மற்ற பாலைக் குடித்து வளரும் குழந்தைகளை விட நல்ல அறிவுத்திறன் பெற்றவர்களாக விளங்குகின்றனர் என்று குஜராத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹித்தேஷ் ஜானி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் கோமாதாவின் சிறப்புகள் தொடர்பாக 3 நாட்கள் நடைபெற்று வரும் தேசிய கருத்தரங்கில், கிராமப்புற மக்களுக்கு பயன்படும் வகையில் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காத, அதேநேரத்தில் எளிதாக பராமரிக்கும் வகையிலான கால்நடை பாதுகாப்பு மையத்தை அமைப்பது தொடர்பான தனது ஆய்வை பேராசிரியர் ஹித்தேஷ் ஜானி சமர்ப்பித்துள்ளார்.அந்த ஆய்வு அறிக்கையை அளித்த பின்னர் , மனிதனின் அறிவுத்திறன் வளர்ச்சிக்கு, கொழுப்புச்சத்து குறைந்த அளவு உள்ள பசும்பால் தான் சிறந்தது என்று அவர் கூறினார்.
ஜாம்நகரையடுத்த ஐஸ்வர்யா கிராமத்தில் உள்ள பெண்கள் கூட்டுறவு அமைப்புகள் பசுமாட்டின் சிறுநீரை (கோமியம்) விற்று அதிகம் லாபம் ஈட்டி வருகின்றனர். மேலும் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம் சற்று உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பசுவின் சிறுநீர் எலும்புருக்கி நோயைக் குணப்படுத்த பயன்படுவதைச் சுட்டிக் காட்டினார். தற்போது 31 வகையான பசு இனங்கள் உள்ளதாகவும், பிராமிண் பசு என்றழைக்கப்படும் வகை பசுக்கள் இத்தாலி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது என்றும், அந்த வகைப் பசுக்கள் குஜராத்திலும் காணப்படுவதாக கூறினார்.
பசுவில் இருந்து கிடைக்கும் 5 விதமான பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படும் பஞ்சகாவ்யம் மனிதனின் நோய்களைக் குணமாக்குவதுடன், விவசாயத்துக்கும் பயன்படுவதாக இக்கருத்தரங்கில் கலந்துக் கொண்ட தமிழக கிராம சமுதாய செயலாக்க மையத்தின் தலைவர் கே.நடராஜன் தெரிவித்துள்ளார்.