வருமான - நிறுவன வரியை குறைக்க வே‌ண்டு‌ம்!

புதன், 13 பிப்ரவரி 2008 (12:34 IST)
''தனி நபர் வருமானவரி மற்றும் நிறுவன வரியை குறைக்க வேண்டும்'' என்று இந்திய தொழில் அமைப்புக்கள் நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

மத்திய நிதி நிலை அறிக்கை ( பட்ஜெட்) வரும் பிப்ரவரி மாத‌ம் 28 அல்லது 29ஆ‌ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் தயாரிப்பில் நிதி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக தொழில் துறை உட்பட பல்வேறு பிரிவினரிடம் நிதி அமைச்சர் சிதம்பரம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்திய தொழில் துறையினர் நேற்று சிதம்பரத்தை சந்தித்து தங்கள் கருத்தையும், எதிர்பார்ப்பையும் தெரிவித்தனர்.

அப்போது அவர்கள் சிதம்பரத்திடம், தனி நபர் வருமான வரி, நிறுவன வரியை குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
சீன நாணயமான யூவானிக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் சீன பொருட்களின் விலை குறைகின்றது. இதனை கட்டுப்படுத்த சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 35 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்க வேண்டும் எனறு கேட்டுக் கொண்டனர்.

இதற்கு பதிலளித்த சிதம்பரம், இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிப்பது பாதிக்க கூடிய அளவில் இல்லை என்றும், ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளதால் ஏற்றுமதி குறைந்துள்ளதாக தகவல்கள் உள்ளன. ஆனால் ஏற்றுமதி வரி வசூலை கணக்கிடுகையில், இந்த வாதம் பொருந்துவதாக இல்லை என்று சிதம்பரம் கூறியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தொழில் துறை பிரதிநிதிகளிடம் சிதம்பரம் கூறுகையில், விவசாய துறை 4 விழுக்காடு வளர்ச்சியை எட்டுவது மட்டும் பொருளாதார வளர்ச்சி 9 முதல் 10 விழுக்காடு வரை எட்ட உதவாது. தொழில் துறை, சேவைத் துறைகள் அதிகளவு வளர்ச்சி அடைந்துள்ளன. இந்த வளர்ச்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

தொழில் துறையும், சேவைத் துறையும் வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனில், வரிகளை குறைக்க வேண்டும் என்று தொழில் துறை பிரதிநிதிகள் சிதம்பரத்திடம் கேட்டுக் கொண்டனர்.

தொழில் துறை பிரதிநிதிகுழு சார்பில் சிதம்பரத்தை சந்தித்த அசோசெம் தலைவர் வேணுகோபால் என்.தத் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது 5 லட்சத்திற்கும் மேல் உள்ள வருமானத்திற்கு 30 விழுக்காடு வருமான வரி விதிக்கப்படுகிறது. இதை 25 விழுக்காடாக குறைக்க வேண்டும். நிறுவன வரியை தற்போது விதிக்கப்படும் 30 விழுக்காடுக்கு மேல் உயர்த்தக் கூடாது.

அதே நேரத்தில் 10 விழுக்காடு விதிக்கப்படும் கூடுதல் வரியை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் இந்திய தொழில் நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களை வாங்குவதற்கும் வரி சலுகை அளிக்க வேண்டும் என்று சிதம்பரத்திடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

சிதம்பரத்தை சந்தித்த மருந்து உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள், தற்போது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவினங்களுக்காக வரி சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை நிறுவனங்களின் சொந்த ஆராய்ச்சிக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இதை மற்ற நிறுவனங்களுக்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கும் வழங்க வேண்டும் என்று சிதம்பரத்திடம் கேட்டுக் கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்