ரயில்வே பட்ஜெட்: வடகிழக்கு புறக்கணிப்பு!

புதன், 27 பிப்ரவரி 2008 (17:34 IST)
ரயில்வே பட்ஜெட்டில் வட கிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும், அநீதி இழைக்கப் பட்டுள்ளது என்று அஸ்ஸாம் மாணவர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த அமைப்பின் ஆலோசகர் டாக்டர் சாமுஜ்வால் பட்டாச்சாரியா செய்தியாளர்களிடம் கூறியதாவது.

வடகிழக்கு மாநிலங்கள் முன்பு புறக்கணிக்கப்பட்டது போலவே இந்த முறையும் ரயில்வே பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. நாங்கள் இந்த பிராந்தியத்தில் ரயில்வே துறைக்கு பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவ்வாறு எதுவும் இல்லை என்று கூறினார்.

ரயில்வே போர்ட்டர்களை கேங்மேன்களாக பணியமர்த்தும் அறிவிப்பு பற்றி கேட்டபோது, இது அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு. ஏனெனில் போர்ட்டர்கள் அனைவரும் பிகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறினார்.

இந்த முடிவால் ரயில்வேயில் கீழ்மட்டத்தில் உள்ள பணிகளுக்கு கூட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும். ரயில்வேயில் குருப் சி, டி பிரிவுகளுக்கு வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத்தின் முடிவு, இந்த பிராந்திய மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு எதிராக உள்ளது.

வட கிழக்கு மாநிலங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள மூன்று புதிய ரயில்கள் போதாது. இருப்பு பாதைகளை, இரண்டு இருப்பு பாதைகளைக மாற்றுவது,. முக்கியமான இடங்களில் மேம்பாலம் கட்டுவது,மின்சார ரயிலை அறிமுகப்படுத்துவது அஸ்ஸாம் மாநிலத்தில் போன்காய்கான் என்ற இடத்தில் உள்ள ரயில்வே பெட்டி தொழிற்சாலையை முழு அளவில் இயக்குவது போன்றவைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில்வே பட்ஜெட் மீண்டும் ஒரு முறை கொல்காத்தாவிற்கு அந்தப்புறம் இந்தியா இல்லை என்பதை நிருபித்துள்ளது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்