ரயில்வே கூடுதல் கட்டணம் சட்ட விரோதம்

வியாழன், 21 பிப்ரவரி 2008 (13:06 IST)
மத்திய ரயில்வே அமைச்சர் லூலு பிரசாத் யாதவ் ரயில்வே மேம்பாட்டு நிதி என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தை விதிப்பது சட்ட விரோதம் என்று ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது.

ரயிலில் பயணம் செய்ய செலுத்தும் டிக்கெ‌ட் கட்டணத்தின் மீது, ரயில்வே மேம்பாட்டு நிதிக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்க ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் முடிவு செய்துள்ளார்.

இது சட்டவிரோதமானது என்று ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இந்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சிவானந்த் திவாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் "ரயில்வமேம்பாட்டு நிதி " என்ற பெயரில் பயணிகள் கட்டணத்தின் மீது கூடுதல் கட்டணம் விதி்க்க முடிவெடுத்திருப்பது சட்ட விரோதமானது.

நீதிபதி ஹெச்.ஆர்.கண்ணா தலைமையிலான குழு 2001 ஆம் ஆண்டில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த "பாதுகாப்பு நிதி" திரட்ட, பயணிகள் கட்டணம் மீது கூடுதல் கட்டணம் விதிக்கலாம் என்று பரிந்துரைத்தது.

இந்த "பாதுகாப்பு நிதி" ரயில் தண்டவாளங்களின் பராமரிப்பு, சிக்னல் அமைப்பு, ரயில் பாதைகளில் பாலங்கள், சிறு பாலங்கள் அமைக்க பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்தது.

இந்த பாதுகாப்பு நிதிக்காக ரூ.17 ஆயிரம் கோடி திரட்ட வேண்டும். இதில் ரூ.12,000 ஆயிரம் கோடி மத்திய அரசு வழங்க வேண்டும். மீதம் 5 ஆயிரம் கோடியை ரயில் கட்டணங்கள் மீது‌, கூடுதல் கட்டணம் விதிப்பதன் மூலம் திரட்ட வேண்டும் என்று நீதிபதி ஹெச்.ஆர்.கண்ணா குழு பரிந்துரைத்தது.

அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த நிதிஷ் குமார் சமர்பித்த ரயில்வே நிதி நிலை அறிக்கையில், ரயில் கட்டணங்களி‌ன் மீது கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அறிவித்தார். இதற்கான கால வரம்பு 2007 மார்ச் மாதத்துடன் முடிவடைந்து விட்டது.

ஆனால் ரயில்வே பாதுகாப்பு நிதியை தற்போதைய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், ரயில்வே மேம்பாட்டு நிதி என்று புதிய பெயர் சூட்டி கூடுதல் கட்டணம் விதிப்பது சட்ட விரோதமானது. இதற்கான எந்த அறிவிப்பும் சென்ற வருடம் சமர்பித்த ரயில்வே நிதி நிலை அறிக்கையில் இல்லை. ரயில்வேயின் லாபத்தை செயற்கையாக அதிகரித்து காண்பிக்கவே புதிய வடிவில் கட்டணம் விதிக்கப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாசுதேவ் பட்டாச்சார்யா தலைமையிலான ரயில்வே நிலைக்குழுவும், புதிய பெயரில் கூடுதல் கட்டணத்தை தொடர்ந்து விதிப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளது என்று சிவானந்த் திவாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்