பங்கு வருவாய் மீதான வரியை மீண்டும் விதிக்க வேண்டும்-மார்க்சிஸ்ட்

பங்குகளின் நீண்ட கால வருவாய் மீதான வரியை மீண்டும் விதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீண்டகால பங்கு முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருவாயின் மீது விதிக்கப்பட்ட நீண்டகால இலாப வரியை மீண்டும் விதிக்க வேண்டும். இதனால் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன், பங்குச் சந்தையில் அடிக்கடி பங்குகளின் விலை அதிகரிப்பதும், பிறகு குறைவதுமாக இருக்கும் நிலையில்லா தன்மை கட்டுப்படுத்தப்படும்.

பங்குச் சந்தையில் ஊக வணிகம் மூலம் அதிக அளவு இலாபம் சம்பாதிக்கின்றனர். பலர் அதிக அளவில் இலாபம் சம்பாதிக்கின்றனர். மற்றவர்களைப் போலவே அவர்களுக்கும் வரி விதிக்க வேண்டும் என்று பிரகாஷ் கரத் கூறினார்.

பங்குகளின் நீண்டகால முதலீட்டில் இருந்து கிடைக்கும் இலாபத்திற்கு முன்பு வரி விதிக்கப்பட்டது. இந்த வரி 2004 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது. தற்போது பங்குகளை வாங்கி ஒரு வருடத்திற்குள் விற்பனை செய்தால், அதில் இருந்து கிடைக்கும் இலாபத்திற்கு மட்டும் வரி விதிக்கப்படுகிறது. ஒரு வருடத்திற்கு பிறகு விற்பனை செய்யப்படும் பங்குகளில் இலாபம் கிடைத்தால், அதை நீண்டகால முதலீடு என்று வகைப்படுத்தி, வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்