போய் வா அன்பே! அமைதியான ஓய்வில் இரு - போனி கபூர் உருக்கம்

வியாழன், 1 மார்ச் 2018 (12:43 IST)
தான் ஒரு நல்ல நண்பனை இழந்து விட்டதாக பாலிவுட் பட தயாரிப்பாளும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தெரிவித்துள்ளார்.

 
துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்று மாலை மும்பையில் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு பாலிவுட் பிரபலங்கள் உட்பட பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். அவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்திருப்பதால் அவரின் மறைவு அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், அவரின் கணவர் போனி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
இரு குழந்தைகளுக்கு தாயும், எனது நண்பனையும் இழந்துவிட்டேன். அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை. இந்த சமயத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பதினர், நண்பர்கள், உடன் பணிபுரிந்தவர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஸ்ரீதேவியின் ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

 
இந்த உலகுக்கு அவர் நடிகையாகவும், தேவதையாகவும் இருந்தார். ஆனால், எனக்கு அவர் காதலாகவும், நண்பராகவும், என் குழந்தைகளுக்கு தாயாகவும் இருந்தார். அவர்களுக்கு எல்லாமாகவும் அவரே இருந்தார். எங்கள் குடும்பத்தின் தூணாக அவர் இருந்தார். தன்னுடைய இடத்தை வேறு ஒருவரால் நிரப்ப முடியாத இடத்தில் அவர் இருக்கிறார். அன்பால் அவருக்கு மரியாதை செலுத்த வேண்டிய நேரமிது.
 
நடிகைகளின் வாழ்வில் திரைச்சீலைகள் ஒருபோதும் விலகுவதில்லை. ஏனெனில், அவர்கள் வெள்ளித்திரையில் பிரகாசிப்பவர்கள். இந்த நேரத்தில் என் ஒரே கவலை ஸ்ரீதேவி இல்லாமல் எனது மகள்களை பாதுகாக்கும் வழியை கண்டறிவதே. அவர் எங்களின் வாழ்க்கையாகவும், எங்களின் வலிமையாகவும், எங்கள் புன்னகைக்கு காரணமாகவும் இருக்கிறார். 
 
என் அன்பே! அமைதியான ஓய்வில் இரு. நம் வாழ்க்கை மீண்டும் ஒரே மாதிரி அமையாது” என போனி கபூர் உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்