சமீபத்தில், தேமுதிக சார்பில் நெல்லையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரேமலதா “அதிமுக, திமுக கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்தால், ஓட்டுக்கு ஒரு லட்சம் கேளுங்கள்” என்று பேசினார். இதுபற்றி தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதுபற்றி கருத்து தெரிவித்த ராஜேஷ் லக்கானி “ பிரேமலதா அப்படி பேசியது தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரி வழக்குப்பதிவு செய்துள்ளார். அதேபோல், தேமுதிகவிடம் திமுக பேரம் பேசியதாக வைகோ கூறியது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார், இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் “வாக்குச்சாவடிகளில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஸ்டிக்கர் விரைவில் ஒட்டப்படும். தமிழகத்தில் இதுவரை ரூ.15 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் 95 சதவீத பணம், சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது” என்று அவர் கூறினார்.