ஒரு மாலைப் பொழுதை மகிழ்ச்சியாகக் கழிக்க...

வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:09 IST)
webdunia photoWD
த‌ற்போது சென்னை‌யி‌ல் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் மெரினாவிற்கு அடு‌த்தபடியாக இரு‌ப்பது தீவுத்திடலில் நடைபெறும் வர்த்தக பொருட்காட்சிதான்.

ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு முதல் தமிழ் புத்தாண்டு வரை வைக்கப்படும் இந்த பொருட்காட்சியைக் காண பல லட்சக்கணக்கானோர் வருகின்றனர்.

சுவைக்க, மகிழ, ரசிக்க, அறிந்து கொள்ள, வாங்கி மகிழ என எண்ணற்றவை இந்த பொருட்காட்சியில் அடக்கம்.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், கண் பரிசோதனை மையம், மீன் அருங்காட்சியகம், செடிகள், துணி மணிகள், உணவுப் பொருட்கள் என ஏராளமான கடைகளை ஒரு வரிசையில் கொண்டுள்ளது இந்த பொருட்காட்சி.

கூவத்தின் இரு கரைகளையும் ஒன்றிணைத்து அமைக்கப்பட்டுள்ளது இந்த தீவுத்திடல் பொருட்காட்சி. இரு கரைகளையும் மரக்கட்டைகளால் பாலம் அமைத்து இணைத்துள்ளனர்.

தினமும் நாடகம், இசை, சொற்பொழிவு, போட்டிகளுக்கு என தனியாக ஒரு அரங்கமே உள்ளது. கடந்த ஞாயிறன்று கூட அங்கு திரைப்பட பின்னணிப் பாடகரும், இசையமைப்பாளருமான தேவாவின் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது.

மறுபக்கத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை சுற்றி வரும் சிறிய ரயில், கார் ரேஸ் என களை கட்டுகிறது.

தமிழக அரசின் நலத்திட்டங்களை விளக்கும் அரங்குகள், பட்டுப்பூச்சி வளர்ப்பு, தீயணைப்புத் துறை, ரிசர்வ் வங்கி என எதைப் பற்றி வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம் அங்கு செல்பவர்கள்.

ஒவ்வொருத் துறைக்கும் தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டு, பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு துறைகளைப் பற்றி விளக்க ஆட்களும் அமர்த்தப்பட்டுள்ளனர்.

சிறுவர்களை அங்கு அழைத்துச் செல்வதன் மூலம் அவர்கள் விரும்பும் துறைகளைப் பற்றிய தகவல்களையும் அவர்களுக்கான ஒரு தேர்வையும் பெற முடியும். இதனால் தற்போதோ தனது லட்சியப் பாதையை வகுக்க முடியும்.

இதோடு நின்று விடவில்லை தீவுத்திடல்... ராட்சத ராட்டினங்கள், ஆடும் கப்பல், சுழன்று வரும் தட்டு என ஒரு பக்கம் மக்களை காந்தம் போல் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கென தனியாகவும் சிறிய ராட்டினங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பெரிய பெரிய பொழுதுபோக்கு தலங்களில் நூற்றுக் கணக்கில் செலவு செய்து மட்டுமே எட்டிய இந்த ராட்டினங்கள் தற்போது சாதாரண மக்களுக்கும் கிட்டியுள்ளது இந்த தீவுத்திடலில்.

அவ்வளவுதானா என்று கேட்பவர்களுக்காகவே... அச்சமூட்டும்... அதி பயங்கர குகைகள். 10 ரூபாய் கொடுத்து உள்ளே சென்று பாருங்கள்... திருப்பத்திற்குத் திருப்பம் திரில்தான்...

தீவுத்திடலுக்குச் சென்று வந்தவர்கள் அனைவரும் இவை எல்லாவற்றையும் கண்டு களித்தார்களோ இல்லையோ நிச்சயம் அந்த பெரிய அப்பளத்தை சுவைக்காமல் வந்திருக்க மாட்டார்கள். அப்பாடா என்று வாய் பிளக்கும் அளவிற்கு உள்ளது அந்த பெரிய அப்பளம்.

விலை மளிவும் இல்லை, உயர்வும் இல்லை, எங்கும் கிடைக்கும் சாதாரண விலையிலேயே அனைத்துப் பொருட்களும் விற்கப்படுகின்றன. நுழைவுக் கட்டணமும் அதிகமில்லை.

webdunia photoWD
பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து தீவுத்திடலுக்குச் சென்று வர அரசுப் போக்குவரத்து பேருந்துகளும் சேவைபுரிந்து வருகின்றன.

இதுவரை பல லட்சக்கணக்கானோர் இந்த தீவுத்திடலைப் பார்த்து வந்துவிட்டனர். பார்க்காதவர்கள் வரும் தமிழ்ப் புத்தாண்டு அதாவது ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் சென்று பார்த்துவிடுங்கள்.