விருச்சிகம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்

வியாழன், 20 செப்டம்பர் 2018 (15:00 IST)
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை). கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான்  லாப  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி லாப ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் அயன, சயன, போக ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். 

மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு அயன, சயன, போக ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி அயன, சயன,போக  ஸ்தானத்தில் இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.
 
பலன்: தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம்  குடும்ப பிரச்சனை தீரும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும்  மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல் சோர்வு வரலாம்.  மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
 
குடும்பஸ்தானத்தில் பகை கிரகமான சனி பகவான் இருந்தாலும், மாதத்தின் பிறபகுதியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு வருவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி  தலைகாட்ட ஆரம்பிக்கும். ஒவ்வொருவராக அவரவர் தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்பதன் மூலம் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்.
 
தொழில் ஸ்தானாதிபதி சூர்ய பகவான் இந்த மாதம் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பர். உத்யோகஸ்தர்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக சம்பளம் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு சம்பளம் கிடைக்கும். இதனால் மனமகிழ்ச்சி கிடைக்கும்.
 
பெண்களுக்கு மனதில் நிம்மதி கிடைக்கும். உங்களைப் புரிந்து கொள்ளாமல் பேசியவர்கள் உங்களின் முக்கியத்துவத்தை உணருவார்கள். மாணவர்களுக்கு அனுகூலமான மாதம். உதவித் தொகை கிடைக்கும். பெரியவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு உங்களுக்கு தேவையானதை வாங்கித் தருவார்கள்.
 
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். உடனிருப்பவர்களை ஆலோசித்து  காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும்.
 
அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும்  உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம்.
 
விசாகம் 4ம் பாதம்: இந்த மாதம் கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு எவ்வளவு  திறமையாக படித்தாலும்பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.
 
அனுஷம்: இந்த மாதம் அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும்  வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில்  ஈடுபட்டாலும் அடுத்தவரை  நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். 
 
கேட்டை: இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.
 
பரிகாரம்: நரசிம்மருக்கு மல்லிகை மலர் வாங்கிக் கொடுக்க பயணத்தில் தடைகள் அகலும்.
 
சந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 2, 3.
 
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 25, 26.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்