விஜய் வற்புறுத்தல் - தொழிலிலிருந்து விலகும் எஸ்.ஏ.சி.

ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2014 (14:33 IST)
விஜய்யின் வற்புறுத்தல் காரணமாக இயக்குனர் தொழிலுக்கு ஓய்வு அளிக்கப் போவதாக எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.

விஜய்யின் சினிமா வாழ்க்கைக்கு அஸ்திவாரமாகவும், ஆணி வேராகவும் இருந்தவர் அவரது தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன். சங்கவி, யுவராணி போன்ற நடிகைகளின் கவர்ச்சியின் பின்புலத்தில் விஜய்யின் முகத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க எஸ்.ஏ.சந்திரசேகரன் எடுத்த முயற்சிகள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஆனால், எஸ்.ஏ.சி.யின் சமீபத்திய படங்கள் எதுவும் ஓடவில்லை. இவர் எப்போது ஓய்வு பெறுவார் என்பது ரசிகர்களின் நெடுநாளைய விருப்பமாக இருந்தது. அதேதான் விஜய்யின் விருப்பமும் என்பது தெரிய வந்துள்ளது.

68 படங்கள் இயக்கியிருக்கும் எஸ்.ஏ.சி. தற்போது டூரிங் டாக்கீஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் 70 வயது முதியவராக ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவும் செய்கிறார்.

இந்த 69 -வது படத்துடன் இயக்குனர் தொழிலிலிருந்து ஓய்வுபெற இருப்பதாகவும், விஜய்யின் வற்புறுத்துதலால் இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

இந்த ஒரு விஷயத்துக்காகவே தமிழ் சமூகம் விஜய்யிடம் அதிகம் கடைமைப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்