அடுத்த வருஷம் போலீஸ் அவெஞ்சர்ஸ்! – ரோகித் ஷெட்டியின் அடுத்த அதிரடி!

சனி, 28 டிசம்பர் 2019 (10:57 IST)
சிங்கம், சிம்பா படங்களை தொடர்ந்து தனது அனைத்து போலீஸ் கதாப்பாத்திரங்களையும் ஒரே படத்தில் இணைக்கிறார் ரோகித் ஷெட்டி.

ஹரி இயக்கத்தில் தமிழில் வெளிவந்து ஹிட் அடித்த படம் ‘சிங்கம்’. சூர்யா நடித்த இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. இந்த கதையை இந்தியில் சிங்கம் என்ற பெயரிலேயே அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் செய்தார் இந்தி இயக்குனர் ரோகித் ஷெட்டி.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தானே சொந்த கதையை எழுதி ‘சிங்கம் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தை இயக்கினார். அதிலும் அஜய் தேவ்கனே நடித்திருந்தார். இந்நிலையில் போலீஸ் கதாப்பாத்திரங்கள் இணைந்த ஒரு ஆக்‌ஷன் பட தொடரை இயக்க ரோகித் ஷெட்டி திட்டமிட்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த வருடம் இதே நாளில் வெளியானது சிம்பா. ரன்வீர் சிங் போலீஸாக நடித்த இந்த படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் அஜய் தேவ்கன் ஸ்பெஷல் விசாரணை அதிகாரியாக வருவார். அதிலேயே சூர்யவன்ஷி என்ற போலீஸ் கதாப்பாத்திரத்தில் அக்‌ஷய் குமார் போஸ்ட் கிரெடிட்டில் வருவார். ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ கூட்டணியில் படம் எடுத்து வரும் நிலையில், ஆக்‌ஷன் போலீஸ் கூட்டணியில் ஒரு மசாலா படத்தை தயார் செய்து வருகிறார் ரோகித் ஷெட்டி.

சிம்பா படம் வெளியாகி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் ரோகித் ஷெட்டி படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடைசியாக சிங்கம் (அஜய் தேவ்கன்), சிம்பா (ரன்வீர் சிங்), வீர் சூர்யவன்ஷி (அக்‌ஷய் குமார்) ஆகியோர் ஒன்றாக நின்று துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காட்சி வீர் சூர்யவன்ஷி படத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்‌ஷய்குமார் நடிப்பில் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் வீர் சூர்யவன்ஷி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்