கொம்பனால் வம்பில் சிக்கிய உதயநிதி

வியாழன், 2 ஏப்ரல் 2015 (10:58 IST)
கொம்பன் படத்துக்கு டாக்டர் கிருஷ்ணசாமி தடைகோரி வழக்கு தொடர்ந்தது, இந்தப் பிரச்சனைக்கு சம்பந்தமில்லாத உதயநிதியையும் வம்பில் மாட்டி விட்டிருக்கிறது.
 

 
உதயநிதியின் நண்பேன்டா இன்று வெளியாகியுள்ளது. இன்றுதான் கொம்பனின் ரிலீஸ் தேதியும். அதிக திரையரங்குகள் கிடைப்பதற்காக, உதயநிதிதான் கொம்பனுக்கு எதிராக கொம்பு சீவினார் என சில வம்பர்கள் கதைவிட்டனர். 
 
இதன் காரணமாக, தேவையேயில்லாமல் சீமானுக்கு போன் செய்து, நான் அப்படியெல்லாம் எதுவும் செய்யலை, கொம்பன் பிரச்சனைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என விளக்கம் தர வேண்டி வந்தது உதயநிதிக்கு. இதுபற்றி கூறிய அவர்,
 
என்னுடைய படம் ஏப்ரல் 2 வெளியாகும் என்பதை இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிவித்து, 275 திரையரங்குகளில் படத்தை வெளியிட ஒப்பந்தமும் போட்டுவிட்டேன். கொம்பன் வெளியாகாவிட்டாலும் என்னுடைய படத்துக்கு அதிக திரையரங்குகள் கிடைக்கப் போவதில்லை. கொம்பன் பிரச்சனையில் தேவையில்லாமல் என்னுடைய பெயரை ஏன் இழுக்கிறார்கள் என தெரியவில்லை என்றார் வருத்தத்துடன்.
 
ம்... கொம்பன் ரிலீஸுக்கு முன்பே பிரளயத்தை உண்டு பண்ணிவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்