தமிழ் புத்தாண்டில் மோதவுள்ள மூன்று மாறுபட்ட படங்கள்!!

புதன், 12 ஏப்ரல் 2017 (15:24 IST)
இந்த வருடத் தமிழ் புத்தாண்டில் (ஏப்ரல் 14) மூன்று படங்கள் வெளியாக உள்ளன. ஆனால், மூன்று படங்களுக்கும் இடையில் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. 


 
 
‘ப.பாண்டி, கடம்பன், சிவலிங்கா’ ஆகிய மூன்று படங்கள் புத்தாண்டை முன்னிட்டு வெளிவருகின்றன. 
 
ப.பாண்டி:
 
தனுஷ் இயக்கத்தில் முதன் முறையாக வெளியாகவிருக்கும் 'ப.பாண்டி' திரைப்படத்தில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயா சிங், மடோனா செபஸ்டியன், தனுஷ், ரின்சன், டிடி, ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ், வித்யுலேகா ராமன், பாலாஜி மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 
 
பவர் பாண்டி முதியவர்களைப் பற்றி பேசுகிற படம். நம் சமூகத்தில் ஒருவருக்கு 60 வயதுக்கு மேல் ஆகிவிட்டால், அவரை ஒரு உதவாத பொருளாகத்தான் பார்க்கின்றனர். இதனை கருவாய் வைத்து படத்தை இயக்கியுள்ளார். தனுஷ் இயக்கும் முதல் படம் என்பதால் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பவர் பாண்டி மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமாக உள்ளது.
 
சிவலிங்கா:
 
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், சக்தி, வடிவேலு, ராதாரவி, பானுபிரியா, ஊர்வசி, மதுவந்தி அருண், ஜெயபிரகாஷ், பிரதீப் ராவத் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்திருக்கிறார்.
 
கன்னடத்தில் சூப்பர்ஸ்டார் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியான 'சிவலிங்கா' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. புறா ஒன்று கொலை சம்பவத்துக்கு சாட்சி சொல்லும் வகையில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த படம். 
 
கடம்பன்:
 
மஞ்சப்பை இயக்குனர் ராகவா இயக்கத்தில் ஆர்யா, கேத்ரின் தெரசா, மதுவந்தி அருண், ஒய்.ஜி.மகேந்திரன், சூப்பர் சுப்பராயன், தீப்ராஜ் ராணா ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 
 
மலை கிராமங்களில் வசிப்பவர்களின் வாழ்வியலை சொல்லும் படமாக கடம்பன் திரைப்படம் உருவாகியுள்ளது. தணிக்கையில் 'யு' சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் ஆர்யாவுக்கு கைக்கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்