பகலிலும், மதியத்திலும், இரவிலும் சிலரின் கனவிலும் ’ஸ்டார்’ ஒளிர்கிறது.. இயக்குனர் இளன் நெகிழ்ச்சி பதிவு..

Mahendran

திங்கள், 13 மே 2024 (12:29 IST)
கவின் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’ஸ்டார்’ திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்தபோது தனக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான அனுபவத்தை இயக்குனர் இளன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
முதல் நாள் காட்சியில், முகம் அறியா சகோதரன் ஒருவன் ஓடி வந்து கேட்டான் : உங்கள கட்டி புடிச்சுக்கலாமா ? அந்த இரு கணம் அன்பு மட்டுமே வெளிப்பட்டது.
 
ஓர் கணவனும் மனைவியும், திரையரங்கை விட்டு விலகவே இல்லை. தேம்பி தேம்பி அழுதாள், நானும் அழுதேன் . அந்த கண்ணீரும் அன்பே.
 
திரையரங்கை சுத்தம் செய்யும் பணி பெண், கன்னத்தை பிடித்து சுத்திப்போட்டது என் தாயின் அன்பை வெளிப்படுத்தியது. பல இடங்களில் கைதட்டலும், கரகோஷமும் "லவ் யூ" என்று சொல்வதாகவே தோன்றியது .
 
இறுதிக்காட்சியின் வரவேற்பு என்னுள் உள்ள எழுத்தாளனை இன்னும் தைரியசாலியாக மாற்றியுள்ளது.
 
ரோலிங் கிரெடிட்ஸ் போட்டவுடன் எழுந்து செல்வதே வழக்கம். ஆனால், நான் கண்டதோ காதலியை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாத காதலர்களைதான்.
 
ஒரு சில [ பல ] விமர்சனங்கள், நான் ஒரு கலைஞனாய் மெருகேற உதவுகிறது. நம்பிக்கைக்கு நன்றி . கூட்டம் அலைமோதுகிறது . பகலிலும், மதியத்திலும், இரவிலும் சிலரின் கனவிலும் ஸ்டார் ஒளிர்கிறது .
 
- அன்புடன் இளன்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்