சங்கமித்ராவிலிருந்து விலகியது ஏன்? - வாய் திறந்த ஸ்ருதிஹாசன்

வியாழன், 8 ஜூன் 2017 (15:49 IST)
இயக்குனர் சுந்தர்.சி இயக்கவுள்ள சங்கமித்ரா படத்திலிருந்து விலகியது பற்றி நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.


 

 
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க உள்ள இப்படத்தை இயக்குனர் சுந்தர் சி. இயக்குகிறார். இதில், நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், சங்கமித்ரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பதாக இருந்தது.   
 
இப்படத்திற்காக ஸ்ருதிஹான்  சில நாட்கள் வாள் பயிற்சி மற்றும் சண்டை பயிற்சி என அனைத்தையும் கற்று வந்தார். இப்படத்தின் துவக்க விழா சில நாட்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டில் நடந்த கேன்ஸ் படவிழாவில் கொண்டாடப்பட்டது. அதில் ஸ்ருதிஹாசனும் கலந்து கொண்டார். ஆனால், திடீரென அப்படத்திலிருந்து அவர் விலகியதாக கூறப்பட்டது.
 
படத்தின் முழுமையான ஸ்கிரிப்ட் அவருக்கு இன்னும் தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக அவருக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை. எனவே, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என அவர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் பற்றி ஸ்ருதிஹாசன் நேரிடையாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
 
இந்நிலையில், சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அவர் “சங்கமித்ரா படத்தில் இரண்டு வருட கால்ஷீட் என்பது தெரிந்தே நான் முழுமனதுடன் நடிக்க சம்மதித்தேன். ஆனால், திரைக்கதை மற்றும் படப்பிடிப்பு தேதிகள் குறித்த விவரங்களை கேட்பது அடிப்படையான விஷயம். இதை விமர்சித்தால் விமர்சிக்கட்டும். பிடிவாதம் பிடிப்பதாக என் மீது சுலபமாக பழி சுமத்த முடியும். ஆனால் ஒரு தெளிவு இல்லாமல் ஒரு படத்தில் பணியாற்ற முடியாது” என அவர் விளக்கம் அளித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்