திரிஷா பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய மன்சூர் அலிகான்… நடிகர் சங்கத்தில் இருந்து தற்காலிக நீக்கம்?

திங்கள், 20 நவம்பர் 2023 (07:47 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் அந்த கால படங்களில் நடிகைகளை ரேப் செய்யும் காட்சிகள் வந்ததாகவும், அதேபோல இதிலும் எதாவது காட்சிகள் இருக்கும் என நினைத்ததாகவும் பேசியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடிகை த்ரிஷா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து மன்சூர் அலிகானின் பேச்சை நடிகர் சங்கம் கண்டித்து ஏன் அவரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கக் கூடாது எனக் கேட்டு அறிக்கை விடுத்துள்ளது. அந்த அறிக்கையில் “திரைத்துறையில் பெண்கள் நுழைவதும் சாதிப்பதும் இன்னும் சவாலாகவே இருக்கும் இன்றைய சூழலில், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சாதித்து வரும் நடிகைகளை பற்றி இப்படி மோசமான கருத்துகளைத் தெரிவித்தது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நடிகைகள் உடன் நிற்கும்.

சக நடிகர்களைப் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய மன்சூர் அலிகானை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களால் கவனிக்கப்படும் பிரபலங்களாக இருக்கும்போது, தான் உதிர்க்கும் கருத்துகளும், வார்த்தைகளும் கண்ணியமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை உணர்வின்றி அவர் பேசியது மிகவும் தவறாகும். எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம்.

தன் தவறு உணர்ந்து, மனம் வருந்தி, உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என தென்னிந்திய நடிகர் சங்கம் கருதுகிறது” எனக் கூறியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்