இளையராஜாவை வாழ்த்திய சிவகுமார்

சனி, 27 ஜனவரி 2018 (12:21 IST)
பத்மவிபூஷண் விருதுபெற்ற இளையராஜாவுக்கு நடிகர் சிவகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷண் விருது இளையராஜாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்குப் பல்வேறு தரப்பில்  இருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன.
 
இந்நிலையில், நடிகர் சிவகுமார் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்தில், “பாரத ரத்னாவுக்கு அடுத்த பெரிய விருது  பத்மவிபூஷண். 68 ஆண்டுகளில் 100 பேர் இந்த விருது வாங்கியிருந்தால் அதிகம். ராகதேவன் இளையராஜாவுக்கு அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இல்லை,  அந்த விருதுக்கு ராஜாவால் கௌரவம் கிடைத்துள்ளது.
 
பஞ்சு அருணாசலம் அவர்களால் 'அன்னக்கிளி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கிடைத்த புதையல் அவர். அப்படத்தின் கதாநாயகனாக நான் நடித்தவன்  என்பதில் பெருமை கொள்கிறேன். 50க்கும் மேற்பட்ட எனது படங்களுக்கு இசையமைத்து, படங்களின் வெற்றிக்கு ஆணிவேராக இருந்திருக்கிறார் . எனது 100வது  படம் 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி', 'சிந்துபைரவி' படங்களின் வெற்றியில் பெரும்பங்கு அவருடையது. 
 
தன் வாழ்நாளை இசைக்காகவே அர்ப்பணித்த அபூர்வ கலைஞர். அவரால் கலையுலகும் தமிழகமும் இந்த விருது மூலம் கௌரவிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை விருதுகள் கொடுத்தாலும் அவர் இசையுலகில் சாதித்ததற்கு அவை ஈடாக முடியாது. வாழ்க இசைஞானி. ஓங்குக அவர் புகழ்” என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்