தமிழ் உள்பட சில மொழிகளில் பாடிய பிரபல பாடகி கல்பனா, தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடகி கல்பனா, ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரின் வீட்டின் கதவு இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததை கவனித்த காவலாளி, உடனடியாக காவல்துறைக்கு தகவல் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் விரைந்து வந்து கல்பனாவின் வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது, அவர் மயக்க நிலையில் படுக்கையில் இருந்துள்ளார். காவல்துறையினர் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரபல பாடகர் மற்றும் நடிகர்-பாடகர் டிஎஸ் ராகவேந்திராவின் மகள் தான் கல்பனா. இவர் ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.