கேப்டன் மகனோடு இணையும் சசிகுமார்… பல ஆண்டு இடைவெளிக்குப் பின் இயக்குனராக கம்பேக்!

புதன், 11 மே 2022 (16:10 IST)
இயக்குனர் சசிகுமார் நீண்ட ஆண்டுகளாக திரைப்படங்கள் எதுவும் இயக்காமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

குற்றப்பரம்பரையினர் பற்றிய கதையை பல வருடங்களாக எடுக்கவேண்டும் என இயக்குனர் பாரதிராஜா முயற்சி செய்தார். சிவாஜி மற்றும் சரத்குமார் நடிப்பில் பூஜை நடைபெற்று போஸ்டரும் வெளியானது. ஆனால் தடைபட்டது. பின்னர் மீண்டும் ஒரு முறை முயன்றார். அப்போதும் அவரால் படமாக்க முடியவில்லை. இதேபோல இயக்குனர் பாலாவும் குற்றப்பரம்பரையினர் பற்றிய கதையை திரைப்படமாக்க உள்ளதாக அறிவித்தார். ஆனால் அதுவும் நிறைவேறவில்லை.

இந்நிலையில் இப்போது இயக்குனரும் நடிகருமான சசிகுமார் அது சம்மந்தமான கதையை வெப் சீரிஸாக உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான கதையை எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுத உள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சசிகுமாரே அதில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் இப்போது வெளியாகி வருகின்றன. விரைவில் இந்த சீரிஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த வெப் சீரிஸில் இப்போது புதிதாக நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகுமார் சுப்ரமண்யபுரம் மற்றும் ஈசன் ஆகிய படங்களுக்குப் பிறகு நீண்ட காலமாக படங்கள் இயக்காமல் இருந்த நிலையில் இந்த வெப் சீரிஸின் மூலமாக இயக்கத்துக்கு ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்