கங்குவா படத்திலும் வேள்பாரி காட்சிகளா?... ஷங்கரின் அப்செட்டுக்குக் காரணம் என்ன?

vinoth

செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (08:49 IST)
இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கதையை அவர் 1000 கோடி ரூபாயில் மூன்று பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளதாகவும், அதில் பாலிவுட் ஹீரோ ரண்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இயக்குனர் ஷங்கர் பகிர்ந்த பதிவில் “சு.வெங்கடேசனின் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலின் காப்புரிமையை கொண்டுள்ளவன் என்ற முறையில், அந்த நாவலில் வரும் சம்பவங்கள் வெவ்வேறு படங்களில் காட்சிகளாக வைக்கப்படுவது வருத்தமளிக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லர் ஒன்றில் அந்த நாவலின் முக்கிய காட்சி பயன்படுத்தப்பட்டுள்ளது மிகுந்த வேதனையை தருகிறது. இத்தகைய விஷயங்களை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். படைப்பாளிகளின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அனுமதியின்றி நாவலின் காட்சிகளை படமாக்காதீர்கள். மீறினால் சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும்.” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான கங்குவா படத்தில்தான் வேள்பாரியின் காட்சிகள் எடுத்துப் பயன்படுத்த பட்டுள்ளதாக ரசிகர்கள் விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். அதே போல சமீபத்தில் வெளியான ஜூனியர் என் டி ஆரின் தேவரா படத்தின் காட்சிகளிலும் வேள்பாரி சாயல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஷங்கர் வேள்பாரியின் உரிமையைப் பெற்றிருக்கும் பட்சத்தில் யார் அந்த காட்சிகளை எடுத்து பயன்படுத்தியுள்ளார்கள் என்று வெளிப்படையாக அறிவிக்காமல் ஏன் இப்படி பெயர் குறிப்பிடாமல் கிசுகிசு போல எதிர்ப்பைப் பதிவு செய்யவேண்டும் எனவும் புரியவில்லை. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்