எஸ்.ஜே.சூர்யாவின் “ராம்சே” பெரியார் சாயலா? செல்வா பதிலால் சர்ச்சை! – விளக்கமளித்த செல்வராகவன்!

செவ்வாய், 9 மார்ச் 2021 (11:06 IST)
செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை சமீபத்தில் வெளியான நிலையில் அதில் வரும் எஸ்.ஜே.சூர்யா குறித்து செல்வராகவன் அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி நீண்ட காலம் கழித்து வெளியாகியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் தற்போது திரையரங்கில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்த பேட்டியொன்றில் செல்வராகவனிடம் “படத்தில் கடவுள் மறுப்பாளராக காட்டப்பட்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ராம்சே என பெயர் வைக்கப்பட்டது கடவுள் மறுப்பாளரான ராமசாமியை குறிக்கும் விதத்திலா?” என்று கேட்கப்பட்டபோது செல்வராகவன் ஆமாம் என பதில் அளித்திருந்தார். படத்தில் சைக்கோ பாத்திரமாக வரும் ஒருவருக்கு இந்த பெயரை வைத்து செல்வராகவன் இழிவுபடுத்துவதாக பலர் சமூக வலைதளங்களில் விமர்சிக்க தொடங்கியதால் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ள செல்வராகவன் “நண்பர்களே ! அந்த நேர் காணலில் அவர் கேட்ட கேள்வி எனக்கு புரியவில்லை. இங்கு நீங்கள் சுட்டிக் காட்டிய பின்புதான் புரிகின்றது. கவனமாக இருந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்